துபாய்: பாகிஸ்தான் அணியின் பவுலிங் சராசரி உலகிலேயே மிக மோசமாக இருப்பதாகவும், அணியில் ஐந்து அல்லது ஆறு வீரர்களை நீக்கிவிட்டு இளம் வீரர்களை சேர்க்க வேண்டும். அதனால் அடுத்த ஆறு மாதங்கள் தோல்விகள் மட்டுமே கிடைத்தாலும் கூட பரவாயில்லை எனவும் முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் வாசிம் அக்ரம் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் அணி வழக்கம்போல 2025 சாம்பியன்ஸ் டிராபியிலும் குரூப் சுற்றிலேயே வெளியேறி உள்ளது. முன்னதாக 2023 ஒருநாள் போட்டி உலகக் கோப்பை, 2024 டி20 உலகக் கோப்பை தொடர்களிலும் பாகிஸ்தான் அணி குரூப் சுற்றிலேயே வெளியேறியது.

அப்போதும் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வியை சந்தித்திருந்தது. அப்போது முதல் இப்போது வரை பாகிஸ்தான் அணியில் பல்வேறு பிரச்சனைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக பந்துவீச்சில் பாகிஸ்தான் அணி மிகவும் மோசமாக உள்ளது.
இந்த ஆண்டு ஒருநாள் போட்டிகளில் 14 அணிகள் ஆடிய நிலையில், அதில் பாகிஸ்தான் அணியின் பௌலிங் சராசரி 60 என்பதாக உள்ளது. அதாவது 60 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தி இருக்கிறார்கள் பாகிஸ்தானின் பந்துவீச்சாளர்கள். இதுவே இரண்டாவது மோசமான செயல்பாடாகும். இதை சுட்டிக்காட்டி வாசிம் அக்ரம் விளாசி இருக்கிறார்.
இது பற்றி அவர் பேசியதாவது: "மிகப்பெரிய நடவடிக்கை அவசியம். பொறுத்தது போதும். நாம் ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகளில் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஒரே வீரர்களை வைத்துக்கொண்டு தோல்விகளை மட்டுமே சந்தித்து வருகிறோம். இந்த முறை தைரியமான நடவடிக்கையை எடுத்து இளம் வீரர்களை உள்ளே கொண்டு வர வேண்டும்."
"பயமில்லாமல் ஆடும் வீரர்களை ஒருநாள் மற்றும் டி20 அணியில் தேர்வு செய்ய வேண்டும். ஐந்து அல்லது ஆறு வீரர்களை அணியை விட்டு நீக்க வேண்டி இருந்தாலும், அதைப்பற்றி யோசிக்காமல் இந்த முடிவை எடுக்க வேண்டும். அப்படி செய்தால் அடுத்த ஆறு மாதங்களுக்கு நாம் தோல்விகளை மட்டுமே சந்திக்க நேரிடும். ஆனாலும் அந்த இளம் வீரர்களை நாம் ஆதரிக்க வேண்டும். 2026 டி20 உலக கோப்பைக்கான அணியை இப்போதே கட்டமைக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
மேலும், "நாம் பாகிஸ்தான் அணியில் நட்சத்திர வீரர்களுக்கு நிறைய வாய்ப்புகளை அளித்து விட்டோம். பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் இந்த ஆண்டு ஐந்து போட்டிகளில் 24 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்கள். அவர்களது சராசரி 60 என்பதாக உள்ளது. கடந்த ஐந்து போட்டியில் ஒரு விக்கெட் வீழ்த்துவதற்கு 60 ரன்கள் விட்டுக் கொடுத்து இருக்கிறோம். இது மிகவும் அதிர்ச்சிகரமான புள்ளி விவரம் ஆகும்."
"இந்த ஆண்டு அமெரிக்கா, ஓமன் உட்பட 14 அணிகள் ஒரு நாள் போட்டிகளில் விளையாடி உள்ளன. அந்த அணிகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் கூட பாகிஸ்தான் அணியின் பௌலிங் சராசரி இரண்டாவது மிக மோசமானதாக உள்ளது. பாகிஸ்தான் அணியில் எந்த அடிப்படையில் தேர்வுகள் நடந்தன என பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பின் தலைவர் கூட்டம் நடத்தி விவாதிக்க வேண்டும்."
"குஷ்தில் ஷா, சல்மான் ஆகா ஆகியோர் இந்திய வீரர்கள் ஆன விராட் கோலி போன்றவர்களது விக்கெட்டுகளை வீழ்த்துவார்கள் என எந்த அடிப்படையில் தேர்வு செய்தார்கள்? என்னை மன்னித்து விடுங்கள், உண்மையை மட்டும் சொல்லுங்கள்" என்று வாசிம் அக்ரம் தனது விமர்சனத்தில் கூறி இருக்கிறார்.