துபாய்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி குறித்து யுவராஜ் சிங் கருத்து தெரிவித்துள்ளார். துபாய் மைதானத்தில் பாகிஸ்தான் அணிக்கு அதிக அனுபவம் இருப்பதால் அந்த அணிக்கு அதிக சாதகம் இருப்பதாக அவர் கூறியுள்ளார். ஆனால் உண்மை அதற்கு நேர்மாறாக உள்ளது. அது பற்றி இப்போது பார்க்கலாம்.
ஜியோ ஹாட்ஸ்டாரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டிகள் குறித்து முன்னாள் வீரர்கள் விவாதித்த நிகழ்ச்சி ஒளிபரப்பானது. அதில் இந்தியா சார்பில் யுவராஜ் சிங்கும், பாகிஸ்தான் சார்பில் ஷாகித் அப்ரிடியும் கலந்து கொண்டனர்.

ஷாகித் அப்ரிடி பேசுகையில், "இந்திய அணியில் மிடில் ஆர்டர் மற்றும் லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடுகிறார்கள். இந்திய அணியில் நிறைய மேட்ச் வின்னர்கள் இருக்கிறார்கள்" என்று கூறினார்.
அடுத்து பேசிய யுவராஜ் சிங், "பாகிஸ்தான் அணி துபாயில் நிறைய போட்டிகளில் ஆடியிருப்பதால் அந்த அணிக்கு அதிக சாதகம் இருப்பதாக நினைக்கிறேன். அவர்கள் அங்கு அதிக போட்டிகளில் ஆடியிருப்பதால் அந்த சூழ்நிலையை நன்றாக தெரிந்து கொண்டிருப்பார்கள்."
"மேட்ச் வின்னர்களை பற்றி ஷாகித் அப்ரிடி கூறினார். இந்திய அணியில் நிறைய மேட்ச் வின்னர்கள் இருக்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனால் பாகிஸ்தான் அணியில் குறைந்த அளவே மேட்ச் வின்னர்கள் இருந்தாலும், ஒரு வீரர் போட்டியை மாற்றி விடுவார். இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டிகள் எப்போதும் மேட்ச் வின்னர்களை சார்ந்தது அல்ல. அந்தத் தருணத்தில், அந்த சூழ்நிலையில் யார் சிறப்பாக விளையாடுகிறார்களோ அவர்கள் தான் வெற்றி பெறுவார்கள். பெரிய போட்டி என்ற எதிர்பார்ப்பு நம்மை ஆட்கொள்ளாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்." என்றார்.
யுவராஜ் சிங் துபாய் மைதானம் பாகிஸ்தானுக்கு சாதகம் எனக் கூறியிருக்கும் நிலையில், அங்கு பாகிஸ்தான் அணி அதிக தோல்விகளை சந்தித்துள்ளது என்பது தற்போது ஒரு புள்ளி விவரத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.
துபாய் மைதானத்தில் பாகிஸ்தான் அணி இதுவரை 22 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் எட்டு வெற்றிகள் மட்டுமே பெற்றுள்ளது. 13 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. ஒரு போட்டியில் முடிவு எட்டப்படவில்லை. அந்த அணியின் வெற்றி சதவீதம் துபாய் மைதானத்தில் 36.36 சதவீதம் என்பதாகவே உள்ளது.
அதே சமயம் இந்திய அணி துபாய் மைதானத்தில் இதுவரை ஏழு ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் ஆறு வெற்றிகளைப் பெற்றுள்ளது. ஒரு போட்டி டை ஆனது. இந்திய அணியின் வெற்றி சதவீதம் துபாய் மைதானத்தில் 85.71 சதவீதம் என்பதாக உள்ளது. அதே சமயம் இங்கு இந்திய அணி ஒரு போட்டியில் கூட தோல்வியடையவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் பார்த்தால், துபாய் மைதானம் இந்திய அணிக்கு சாதகமாக உள்ளது. பாகிஸ்தான் அந்த மைதானத்தில் அதிகப் போட்டிகளில் விளையாடியிருந்தாலும் தோல்விகளை மட்டுமே அதிகம் சந்தித்துள்ளது.
அதனால், யுவராஜ் சிங் கூறியதை அப்படியே ஏற்க முடியாது. பாகிஸ்தான் அணி துபாயில் அதிகப் போட்டியில் ஆடி இருந்தாலும், அந்த சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்தி வெற்றி பெறவில்லை என்பதே உண்மை.