கொழும்பு: இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் டி20 உலகக் கோப்பை 2026 போட்டி கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாசா மைதானத்தில் இன்று மாலை 7 மணிக்கு நடைபெறுகிறது. இந்திய அணியை பொறுத்தவரை முதல் குரூப் ஏ ஆட்டத்தில் அமெரிக்காவை 29 ரன்கள் வித்தியாசத்திலும், நமீபியாவை 93 ரன்கள் வித்தியாசத்திலும் தோற்கடித்து வலுவாக உள்ளது.
மறுபுறம் பாகிஸ்தான் அணி, கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நெதர்லாந்துக்கு எதிராக மூன்று விக்கெட் வித்தியாசத்தில் ஒரு பரபரப்பான வெற்றியைப் பதிவு செய்தது. பின்னர் அதே மைதானத்தில் அமெரிக்காவை 32 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முன்னேறியுள்ளது. இரு அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், இந்தப் போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா, பாகிஸ்தான் டி20 உலகக் கோப்பை 2026 மோதலை உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கும் நிலையில், கொழும்பில் எதிர்பார்க்கப்படும் மழை வானிலை போட்டிக்கு இடையூறாக அமையும் என்ற செய்திகள் வெளியாகியுள்ளது. மழை காரணமாக ஆட்டத்தின் ஓவர்கள் குறைக்கப்படலாம். இதனால், இரு அணிகளுக்கும் சவாலான சூழ்நிலை ஏற்படும். ஒருவேளை போட்டி முழுமையாக கைவிடப்பட்டால், இரு அணிகளுக்கும் புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்படும்.
அக்யூ வெதர் அறிக்கையின்படி, ஞாயிற்றுக்கிழமை காலை கொழும்பில் மேகமூட்டமான வானிலையுடன் லேசான மழைப்பொழிவுக்கு வாய்ப்புள்ளது. இந்தக் காலகட்டத்தில் மழைப்பொழிவுக்கான வாய்ப்பு 73 சதவீதமாக உள்ளதுடன், 100 சதவீதம் மேகமூட்டம் காணப்படும். காலை நேரத்தில் வெப்பநிலை சுமார் 27 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் டி20 உலகக் கோப்பை 2026 போட்டிக்கு முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கொழும்பில் மழைக்கான வாய்ப்பு மேலும் அதிகரிக்கிறது. பிற்பகல் நேரத்தில் மழைப்பொழிவுக்கான வாய்ப்பு 76 சதவீதமாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. மேகமூட்டம் 100 சதவீதமாகவே நீடிக்கும் நிலையில், வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் ஆக உயரக்கூடும்.
கொழும்பில் பிற்பகல் முழுவதும் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்ய 50 முதல் 70 சதவீதம் வாய்ப்புள்ளது. வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக இலங்கை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.
இந்தியா, பாகிஸ்தான் டி20 உலகக் கோப்பை போட்டியின் வானிலை முன்னறிவிப்பு ரசிகர்களுக்கு கலக்கத்தை அளித்தாலும், பிரேமதாசா மைதானத்தின் நவீன வடிகால் அமைப்பு காரணமாக, மைதானத்தில் மழை நீர் தேங்காது. மற்ற சர்வதேச மைதானங்களை போலன்றி, இந்த மைதானத்தில் முழு பகுதியையும் பாதுகாக்கக் கூடிய தார் பாய்கள் போடப்படும். இந்த வசதியின் காரணமாக, மைதானம் அதிக நீரை உறிஞ்சுவதில்லை.
இலங்கையில் உள்ள இந்த மைதானத்தில் இருக்கும் வசதிகளைக் கருத்தில் கொள்ளும்போது, கனமழை நின்ற பிறகு ஒரு மணி நேரத்திற்குள் ஆட்டத்திற்குத் தயார் செய்ய முடியும். அதேசமயம், இந்தியா, பாகிஸ்தான் போட்டிக்கு மாற்று நாள் (Reserve Day) எதுவும் வைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.