வலுவான கூட்டணி
உலகக்கோப்பை தொடரில் இந்தியா வலுவான அணியாக நுழைந்தது. இந்திய அணியின் டாப் ஆர்டரில் ரோஹித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி ஆகிய மூன்று சிறந்த அனுபவ பேட்ஸ்மேன்களை தாண்டித் தான் எதிரணி வெற்றி பெற முடியும் என்பதே அதற்கு காரணம்.
எலும்பு முறிவு
இடது கை பெரு விரலில் ஏற்பட்ட எலும்பு முறிவால், அந்த பலமான கூட்டணியில் இருந்து ஷிகர் தவான் வெளியேறினார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் ஷிகர் தவான் பேட்டிங் செய்த போது, பாட் கம்மின்ஸ் வீசிய 9வது ஓவரின் முதல் பந்தில் அவருக்கு காயம் ஏற்பட்டது.
ஸ்கேன்
எனினும், காயத்தோடு ஆடிய தவான் சதம் அடித்து கலக்கினார். ஆனால், அவரால் இரண்டாம் பாதியில் பீல்டிங் செய்ய இயலவில்லை. பின்னர் ஸ்கேன் செய்து பார்த்த மருத்துவர்கள், அவர் மூன்று வாரம் ஓய்வில் இருக்க வேண்டும் என கூறினர்.
தவானை நீக்கவில்லை
அதனால், உலகக்கோப்பை தொடரின் லீக் சுற்றில் பல போட்டிகளில் அவரால் ஆட முடியாத நிலை ஏற்பட்டது. அவரது காயம் குணமாகும் வரை காத்திருக்க முடிவு செய்த கேப்டன் விராட் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, அவரை அணியில் இருந்து நீக்காமல் உள்ளனர்.
வலைப்பயிற்சி
இந்த இடைவெளியில் தவான் மன உறுதியை இழக்காமல் இருக்கிறார். நியூசிலாந்து போட்டிக்கு முன் இந்திய வீரர்கள் வலைப்பயிற்சியில் ஈடுபட்டு இருந்த போது, காயத்தில் இருக்கும் தான், அறையில் முடங்கி விடாமல் மற்ற வீரர்களின் பயிற்சியில் பங்கேற்றார்.
கால் பயிற்சிகள்
தற்போது பாகிஸ்தான் போட்டிக்கு இந்திய வீரர்கள் தயாராகி வரும் நிலையில், தவான் ஜிம்முக்கு சென்று பயிற்சி செய்துள்ளார். அவரது இடது கை பெரு விரலில் காயம் இருப்பதால், கையை பயன்படுத்தாமல், காலை மட்டும் பயன்படுத்தி செய்யும் உடற்பயிற்சிகளை மேற்கொண்டார்.
விரல் பத்திரம்
தான் உடற்பயற்சி செய்யும் வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் தவான். இதைப் பார்க்கும் போது தவான் நம்பிக்கையுடன் இருக்கிறார் என சொல்லத் தோன்றினாலும், அவரது கை விரல் காயம் மேலும் பாதிக்கப்படலாம் என்ற எண்ணமும் வராமல் இல்லை. விரலை பத்திரமா பார்த்துக்குங்க தவான்!!