இந்தியா - பாக். போட்டிகள்
இந்தியா - பாகிஸ்தான் விளையாடும் கிரிக்கெட் போட்டிகளில் எல்லாம் பஷீர் என்ற இந்த ரசிகரை நாம் பார்த்திருக்க முடியும். பாகிஸ்தான் நாட்டவர் என்றாலும் தற்போது அமெரிக்காவின் சிகாகோ நகரில் வசித்து வருகிறார். அதனால், சிகாகோ மாமா என பாகிஸ்தான் ரசிகர்களால் அழைக்கப்படுகிறார்.
நீண்ட பயணம்
தற்போது உலகக்கோப்பை தொடர் இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வரும் நிலையில், இந்தியா - பாகிஸ்தான் போட்டியை காண அமெரிக்காவில் இருந்து இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகருக்கு சுமார் 6000 கிலோமீட்டர் பயணம் செய்து வந்துள்ளார். ஆனால், கையில் போட்டிக்கான டிக்கெட் இல்லை.
தோனி மீது நம்பிக்கை
டிக்கெட் இல்லாமல் என்ன செய்வார்? என்று கேட்டால், தோனி இருக்கிறார் என நம்பிக்கையுடன் கூறுகிறார். கடந்த 2011 உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடந்த போது மொஹாலியில் நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் அரையிறுதிப் போட்டியை பார்க்க வந்தார் பஷீர்.
நடந்தது என்ன?
அப்போது அவருக்கு டிக்கெட் கிடைக்கவில்லை. அப்போது தோனி அவருக்கு இலவச டிக்கெட் கொடுத்து இருக்கிறார். அப்போது முதல் தோனியுடன் தொலைபேசித் தொடர்பில் இருப்பதாக கூறுகிறார் சிகாகோ மாமா.
டிக்கெட் கேட்கவில்லை
2011 முதல் இந்தியா - பாகிஸ்தான் போட்டிகளுக்கு தான் தோனியிடம் இருந்து டிக்கெட் பெற்று வருவதாக கூறினார். இப்போது தோனியை தொடர்பு கொண்டு அவர் இன்னும் டிக்கெட் கேட்கவில்லையாம்.
வாக்கு கொடுத்த தோனி
ஆனால், கடைசி முறை இவர் தோனியை பார்த்த போது, உலகக்கோப்பை தொடருக்கு தான் டிக்கெட் தருவதாக வாக்கு கொடுத்திருக்கிறார் தோனி. அதை நம்பி 6000 கிலோமீட்டர் பயணம் செய்து வந்துள்ளார் இந்த பாகிஸ்தான் ரசிகர்.
நட்பு
இந்த பாகிஸ்தான் ரசிகரைப் போலவே இந்திய அணி ஆடும் போட்டிகளில் எல்லாம் ஆதரித்து வரும் சச்சின் டெண்டுல்கரின் தீவிர ரசிகர் சுதிருக்கு (உடம்பு முழுவதும் இந்திய மூவர்ணக் கொடியை பெயின்ட் அடித்துக் கொண்டு இருப்பாரே.. அவரே தான்!) பஷீர் பல வகைகளில் உதவி வருகிறார். இருவரும் நண்பர்களாகவும் மாறி உள்ளனர்.
பஷீர் செய்த உதவி
கடந்த ஆசிய கோப்பை தொடரின் போது, தனக்கு எப்போதும் இலவச டிக்கெட் அனுப்பி, போட்டிக்கு சென்று, வரும் செலவுகளையும் கவனித்துக் கொள்ளும் சச்சினை தொடர்பு கொள்ள முடியாமல் சிரமப்பட்டுள்ளார் சுதிர். அப்போது, பஷீர், தொலைபேசி மூலம் இவருக்கு உதவுவதாக வாக்குறுதி அளித்து, தன் அறையிலேயே அவரை தங்க வைத்துள்ளார்.
நட்புணர்வு
இப்போது உலகக்கோப்பை தொடரிலும் இருவரும் ஒரே அறையில் தான் தங்கி உள்ளனர். இந்தியா - பாகிஸ்தான் பகை நாடுகள் என்றாலும், இது போன்ற நட்புணர்வு அதை எதிர்காலத்தில் மாற்றும் என்ற நம்பிக்கை உள்ளது.