அணியில் இடம்
உலகக்கோப்பை தொடரில் விஜய் ஷங்கருக்கு அணியில் ஆடும் வாய்ப்பு கிடைக்காது என்றே பரவலாக கூறப்பட்டது. அதற்கு காரணம், பயிற்சிப் போட்டியிலும், ஐபிஎல் தொடரிலும் விஜய் ஷங்கர் அதிக அளவில் ரன்கள் குவிக்கவில்லை. எனினும், தவான் காயம் அடைந்ததால், பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் வாய்ப்பு பெற்றார் விஜய் ஷங்கர்.
இந்தியா அபாரம்
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு, ரோஹித் சர்மா 140, ராகுல் 57, விராட் கோலி 77 ரன்கள் அடித்து பெரிய ஸ்கோரை எட்டச் செய்தனர். பாகிஸ்தான் அணிக்கு 337 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது இந்தியா.
பாகிஸ்தான் நிதானம்
இந்திய அணிக்கு பும்ரா - புவனேஸ்வர் குமார் சிறப்பான துவக்கம் அளித்தனர். இவர்கள் இருவரும் ஃபுல் லென்த்தில் பந்துகளை வீசித் தள்ள, பாகிஸ்தான் அணி நிதானம் காட்டியது.
புவனேஸ்வர் காயம்
5வது ஓவரை புவனேஸ்வர் குமார் வீசி வந்தார். அந்த ஓவரின் நான்காவது பந்தை அவர் வீசிய போது, கால் தடுமாறி கீழே விழுந்தார். அதனால், அவரது காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது., உடனடியாக வெளியேறினார் அவர்.
இரண்டு பந்துகள்
அந்த ஓவரில் மீதமிருந்த 2 பந்துகளை வீச அழைக்கப்பட்டார் விஜய் ஷங்கர். இதுவரை விஜய் ஷங்கருக்கு பெரிய அளவில் பந்துவீச வாய்ப்பு கிடைத்ததில்லை. அப்படி கிடைத்தாலும், அதில் எல்லாம் சொதப்பி இருந்தார் விஜய் ஷங்கர்.
முதல் பந்தில் விக்கெட்
இந்த நிலையில், அவர் வீசிய முதல் பந்திலேயே பாகிஸ்தான் அணியின் துவக்க வீரர் இமாம் உல் ஹக் ஆட்டமிழந்தார். இது மிக முக்கிய விக்கெட் ஆகும். மேலும், இந்திய அணிக்கு கிடைத்த முதல் விக்கெட்.
தொடர்ந்து வாய்ப்பு
வெறும் 2 பந்துகள் வீச வந்த விஜய் ஷங்கர் விக்கெட் எடுக்கவே அவருக்கு தொடர்ந்து பந்து வீச வாய்ப்பு கொடுத்தார் விராட் கோலி. புவனேஸ்வர் குமார் மீண்டும் பந்து வீச முடியாத நிலையில், ஜாதவ், விஜய் ஷங்கர் இருவர் மட்டுமே இந்திய அணிக்கு இருக்கும் வாய்ப்பு. அதில் விஜய் ஷங்கர் தன்னை நிரூபித்து தொடர்ந்து வாய்ப்பு பெற்றார். இந்தப் போட்டி விஜய் ஷங்கரை ஒரு ஆல்-ரவுண்டராக அடையாளம் காட்டினால், அவர் இந்திய அணியில் தொடர்ந்து இடம் பிடிக்க முக்கிய காரணமாக அமையும்.