'மீடியா ஹைப்'பைப் பார்த்து கவனச் சிதறல் கூடாது-டோணி அறிவுரை
மொஹாலி: மீடியாக்கள் இந்திய அணி குறித்து எழுதி வருவதைப் பார்த்து கவனச் சிதறல் அடையாமல், பதட்டப்படாமல், வழக்கமான ஆட்டத்தை ஆட இந்திய வீரர்கள் முயல வேண்டும் என்று இந்திய வீரர்களுக்கு கேப்டன் டோணி அறிவுறுத்தியுள்ளார்.

வெளியுலக நெருக்கடிகளைப் பார்த்து யாரும் பீதி அடையவோ, பதட்டப்படவோ வேண்டாம். நமது ஒரே இலக்கு வெற்றி மட்டுமே. அதை மட்டுமே மனதில் கொண்டு ஆடுங்கள் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இன்றைய அரை இறுதிப் போட்டி குறித்து நாடே பதறிப் போய்க் கிடக்கிறது. பிற்பகல் 2.30 மணிக்கு மேல் நாட்டின் பாதி ஜனத் தொகை டிவி பெட்டியோடு ஐக்கியமாகி விட காத்துக் கிடக்கிறது. பலர் அலுவலகங்களுக்கு மட்டும் போட்டு விட்டு போட்டியைக் கண்டு களிக்க தயாராகி வருகின்றனர்.
பத்திரிகைகளும், டிவிகளும் விடிய விடிய இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி குறித்துதான் பேசிக் கொண்டுள்ளன. டிவியைத் திறந்தாலே, குறிப்பாக ஆங்கில சானல்களைப் போட்டாலே யாராவது ஒருவர் இந்திய அணியை அக்குவேறு ஆணி வேறாக அலசிக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம். அந்த அளவுக்கு எங்கு பார்த்தாலும் கிரிக்கெட் பேச்சுதான்.
இந்த நிலையில் இந்திய வீரர்களுக்கு டோணி ஒரு முக்கியமான அறிவுரையை சொல்லியுள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்தியா, பாகிஸ்தான் போட்டி என்றாலே எதிர்பார்ப்புகள் பெரிதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் வீரர்கள் அதுகுறித்துக் கவலைப்படாமல், வெளியுலக நெருக்கடிகள் குறித்து கவலைப்படாமல் ஆட்டத்தில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்.
மீடியாக்களின் செய்திகளால் கவனச் சிதறல் அடைய வேண்டாம். வெற்றியை மட்டுமே பாருங்கள். வேறு எதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள் என்று நான் அறிவுறுத்தியுள்ளேன்.
கிரிக்கெட்டில் எது கிடைத்தாலும் அதை ஏற்க வேண்டும். நம் மீதான எதிர்பார்ப்புகளை பார்த்து திசை திரும்பி விடக் கூடாது. போட்டியைக் காண மதிப்புமிக்க விருந்தினர்கள் - இந்திய, பாக், பிரதமர்கள்- வரப் போகிறார்கள். எனவே அவர்களுக்கு முன்பு நமது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்.
இந்தியாவில் ஆடுவதால் எங்களுக்கு நெருக்கடி எதுவும் இல்லை. இது நிச்சயம் பெரிய போட்டி. எனவே நிச்சயம் நாங்களும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயல்வோம். வீரர்களும் தயாராகவே உள்ளனர். கடந்த போட்டிகளைப் போலவே இந்தப் போட்டிக்கும் நாங்கள் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளோம் என்றார் டோணி.
Story first published: Wednesday, December 7, 2011, 18:45 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications