கொழும்பு: 2026 டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் குறித்து முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். சமீப காலங்களிலேயே இந்தியா எதிர்கொள்ளும் மிகக்கடினமான போட்டியாக இது இருக்கும் என்று அவர் கணித்துள்ளார்.
கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டி மீது உலகம் முழுவதும் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்நிலையில் கிரிக்பஸ் இணையதளத்திற்குப் பேட்டியளித்த தினேஷ் கார்த்திக், கொழும்பு ஆடுகளத்தின் தன்மையைச் சுட்டிக்காட்டிப் பேசியுள்ளார்.

தினேஷ் கார்த்திக் கூறுகையில், "சமீப காலத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா விளையாடிய போட்டிகளிலேயே இதுதான் மிகக்கடினமான போட்டியாக இருக்கும். ஏனெனில் கொழும்பு ஆடுகளத்தின் தன்மை மற்றும் சூழல் பாகிஸ்தான் அணிக்குச் சாதகமாகவே உள்ளது. மற்ற நேரங்களை விட இந்த முறை இந்தியாவிற்கு நெருக்கடி கொடுக்கப் பாகிஸ்தானுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன" என்று தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் பலவீனம் குறித்தும் அவர் பேசியுள்ளார். "இந்திய பேட்ஸ்மேன்கள் தட்டையான ஆடுகளங்களில் ரன்களைக் குவிப்பார்கள். ஆனால் பந்து நின்று திரும்பக்கூடிய ஆடுகளங்களில் அவர்களின் செயல்பாடு சற்று வித்தியாசமாக உள்ளது. சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமான மைதானங்களில் இந்தியாவின் புள்ளிவிவரங்கள் கவலை அளிக்கும் வகையில் உள்ளன. எனவே, இந்த விஷயத்தில் இந்தியா மிகவும் கவனமாக இருக்க வேண்டும்" என்று கார்த்திக் எச்சரித்துள்ளார்.
பாகிஸ்தான் அணி இம்முறை இரண்டு வெற்றிகளுடன் நல்ல உத்வேகத்தில் உள்ளது. கொழும்பு ஆடுகளம் மெதுவாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதால், பாகிஸ்தான் அணியின் புதிய சுழற்பந்து வீச்சாளர் உஸ்மான் தாரிக் இந்திய அணிக்குத் தலைவலியாக இருக்க வாய்ப்புள்ளது. அவரது வித்தியாசமான பந்துவீச்சை எதிர்கொள்வது இந்திய பேட்ஸ்மேன்களுக்குச் சவாலாக அமையலாம்.
தினேஷ் கார்த்திக் இப்படி எச்சரித்தாலும், ஒட்டுமொத்த பலத்தில் இந்தியாவே முன்னிலையில் உள்ளது. டி20 உலகக்கோப்பை வரலாற்றில் பாகிஸ்தானுக்கு எதிராக 8 முறை மோதியுள்ள இந்தியா, 7 முறை வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மேலும் சமீபத்திய ஆசியக் கோப்பைத் தொடர்களிலும் இந்தியாவே பாகிஸ்தானை வீழ்த்தியுள்ளது.