துபாய்: இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா காயம் அடைந்துள்ள நிலையில், அவரது இடத்தில் களமிறங்கிய சிவம் துபே பவர் பிளேவில் 2 ஓவர்களை வீசி வெறும் 12 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்திருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் சில பந்துகள் ஸ்விங்காகியது சிஎஸ்கே ரசிகர்களுக்கு வியப்பையே அளித்துள்ளது.
நட்சத்திர வீரரான சிவம் துபே, 2019 டிசம்பர் மாதத்தில் இருந்து 33 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி இருக்கிறார். இந்த 33 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. அதாவது சிவம் துபே விளையாடிய ஒரு போட்டியில் கூட இந்திய அணி தோல்வி அடைந்ததில்லை. இதனால் இந்திய அணியின் அதிர்ஷ்டம் வாய்ந்த வீரராக சிவம் துபே பார்க்கப்படுகிறார்.

என்னதான் பவுலிங் ஆல்ரவுண்டர் என்று கூறிக் கொண்டாலும், ஐபிஎல் தொடரில் பேட்ஸ்மேனாக மட்டுமே ஆடி வருகிறார். சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனி இருந்த போதும் சரி, ருதுராஜ் காலத்திலும் சரி.. தப்பித் தவறி கூட சிவம் துபே கைகளில் பந்தை கொடுக்க மாட்டார்கள். சிஎஸ்கே அணியின் நிரந்தர இம்பேக்ட் பிளேயர் சிவம் துபே தான்.
இந்த நிலையில் ஆசியக் கோப்பைத் தொடரில் சிவம் துபே பவுலிங்கில் அசத்தி வருகிறார். 5 போட்டிகளில் ஆடியுள்ள சிவம் துபே 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். தற்போது ஆசியக் கோப்பை இறுதியில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான இந்திய அணி அடி வருகிறது. காயம் காரணமாக ஹர்திக் பாண்டியாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அர்ஷ்தீப் சிங்கை சேர்க்காமல் ரிங்கு சிங்கை இந்திய அணி களமிறக்கியது.
இதனால் பவர் பிளேவில் முதல் ஓவரை யார் வீசுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அப்போது சூர்யகுமார் யாதவ் நேராக சிவம் துபே கைகளில் பந்தை கொடுத்தார். இது இந்திய அணி ரசிகர்களுக்கு பீதியை கொடுத்தது. ஆனால் சிவம் துபே நம்பிக்கையுடன் 130 கிமீ வேகத்திற்கும் அதிகமான வீசி 4 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார். தொடர்ந்து 2வது ஓவரிலும் 8 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார்.
இதன் மூலமாக பவர் பிளேவில் 2 ஓவர்களில் 12 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து சிவம் துபே மிரட்டி இருக்கிறார். பும்ரா பந்திலேயே பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் சிக்ஸ் அடித்த நிலையில், சிவம் துபே அசத்தலாக பவுலிங் செய்துள்ளதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இதனால் சிவம் துபே ரியல் ஆல்ரவுண்டர் என்றும் ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர்.