அகமதாபாத் : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியா மோதிய ஆட்டம் எவ்வித பரபரப்பும் இன்றி இந்தியாவுக்கு சாதகமாக முடிந்துவிட்டது.
பாகிஸ்தான் போட்டி என்றால் விறுவிறுப்பு இருக்கும் என்ற கதை போய் தற்போது வெறும் அரசியல் சர்ச்சைகளும் மட்டும்தான் இருக்கிறது. இந்தியா பாகிஸ்தான் போட்டி என்றால் களத்தில் இரு வீரர்களும் ஆக்ரோஷமாக விளையாடுவார்கள் என்று தான் ரசிகர்கள் போட்டியை பார்த்தார்கள்.

ஆனால் தற்போது கிரிக்கெட் போட்டியை விட அரசியல் நிலைப்பாட்டுக்காக தான் இந்த போட்டி நடத்தப்படுகிறது. குறிப்பாக பாகிஸ்தான் அணி முன்பு போல் சரியாக செயல்படாததும் ஆட்டம் ஒருதலைபட்சமாக மாறிவிடுகிறது. இந்த நிலையில் நேற்று பாகிஸ்தான் அணிக்கு அகமதாபாத் ரசிகர்கள் கொடுத்த சேட்டை மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. பாகிஸ்தான் வீரர்களை நோக்கி ஜெய்ஸ்ரீராம் என்ற கோஷத்தை எழுப்புவது போன்ற செயல்களில் அகமதாபாத் ரசிகர்கள் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் தற்போது புதிய வீடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது. அதில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பில்டிங் செய்து கொண்டிருக்கும்போது இந்திய ரசிகர் ஒருவர் காகிதத்தில் ராக்கெட் செய்து அதனை மைதானத்தை நோக்கி விட்டிருக்கிறார்.
பாகிஸ்தான் வீரர்கள் விளையாடிக் கொண்டிருக்கும்போது அந்த பேப்பர் ராக்கெட் மைதானத்தில் வந்து விழுந்தது. எனினும் பாகிஸ்தான் வீரர்கள் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அந்த காகிதத்தை எடுத்துக்கொண்டு வெளியே தூக்கி போட்டு விட்டார்கள். கிரிக்கெட் மைதானத்தில் பாட்டில்கள் வீசப்படுவதால் தான் தண்ணீர் பாட்டில் எடுத்து செல்ல பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் நேற்று பேப்பரில் ராக்கெட் செய்து ரசிகர்கள் மைதானத்தில் விட்டது பாகிஸ்தான் அணிக்கு செய்யப்பட்ட அவமரியாதையாக பார்க்கப்படுகிறது. இதனால் தான் காலையில் இருந்து இந்திய அணி ரசிகர்கள் பாகிஸ்தான் அணிக்கு மன்னிப்பு கேட்டு ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.