மும்பை: ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி ஒன்பதாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறது. இதன் மூலம் சாதனை படைத்த இந்திய அணி வீரர்களுக்கு 21 கோடி ரூபாய் பரிசு தொகையை பிசிசிஐ அறிவித்து இருக்கிறது.
பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு இரு நாட்டுக்கும் இடையிலான உறவு முற்றிலும் முறிந்துவிட்டது. இந்த நிலையில் இந்தியா ஆபரேஷன் சிந்தூர் மூலம் பதில் தாக்குதல் நடத்திய பிறகு முதல் முறையாக இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி ஆசிய கோப்பை தொடரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த போட்டியில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று பலரும் வலியுறுத்தி வந்தனர். எனினும் இதற்கு மத்திய அரசு அனுமதி அளித்த நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா விளையாடியது. அது மட்டுமில்லாமல் இந்த தொடரில் மொத்தம் மூன்று முறை பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டு இந்தியா மூன்றிலுமே ஹாட்ரிக் வெற்றி பெற்று சாதனை படைத்தது.
அது மட்டும் இல்லாமல் இலங்கை, வங்கதேசம், ஓமன், யு.ஏ.இ அணிகளுக்கு எதிராகவும் இந்தியா வெற்றி பெற்றது. இந்த தொடரில் தோல்வியை தழுவாத ஒரே அணி என்ற பெருமையை இந்தியா மட்டுமே படைத்திருந்தது. இதனால் இந்தியாவின் இந்த சாதனை பயணத்தை பாராட்டி இந்திய கிரிக்கெட் அணிக்கு 21 கோடி ரூபாய் பரிசு தொகையை வழங்குவதாக பிசிசிஐ அறிவித்திருக்கிறது.
இந்திய அணியில் உள்ள வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் மற்றும் குழுவினர் அனைவருக்கும் இந்த பரிசு தொகை பகிர்ந்து அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் வீரர்களுக்கு ஒரு கோடி ரூபாயில் பயிற்சியாளர் மற்றும் மற்ற குழுவினருக்கு 50 லட்சம் முதல் 75 லட்சம் ரூபாய் வரை கிடைக்கலாம் என தெரிகிறது இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள பதிவில் மூன்று அடி கொடுத்து இருக்கின்றோம். ஒரு முறை கூட பதில் வரவில்லை. செய்தியை உணர்த்தி விட்டோம் என்று கூறி இந்த பரிசு தொகையை அறிவித்திருக்கிறது.