துபாய்: 2025 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி கோப்பையை வென்றது. ஆனால், வெற்றி பெற்றதற்கான கோப்பையை ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் (ACC) தலைவரும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (PCB) தலைவரும், பாகிஸ்தான் உள்துறை அமைச்சருமான மோஷின் நக்வியிடம் இருந்து வாங்குவதற்கு இந்திய அணி வீரர்கள் மறுப்பு தெரிவித்தனர். இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் வெளிப்படையாகக் கோப்பையை அவரிடம் இருந்து வாங்க மறுத்ததால், இந்தப் பரிசளிப்பு விழாவில் பெரும் சர்ச்சை வெடித்தது.

இந்த ஆசிய கோப்பை தொடர் முழுவதும், இந்திய அணிக்கும் பாகிஸ்தான் வீரர்களுக்கும் இடையே மூன்று போட்டிகளிலும் தொடர்ந்து சர்ச்சை எழுந்தது. இந்தியக் கேப்டன் சூர்யகுமார் யாதவ், பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அகாவுடன் கைகுலுக்க மறுத்தது, போட்டிகள் முடிந்த பின்னரும் இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்குவதைத் தவிர்த்தது, பாகிஸ்தான் வீரர்கள் இந்திய விமானங்களைச் சுட்டு வீழ்த்துவது போன்ற சைகைகளைச் செய்து சீண்டியது என இது பெரிதாக வெடித்தது. இந்த விவகாரங்கள் சர்வதேச கிரிக்கெட் அமைப்பு வரை சென்று, இரு அணியினரும் மாறி மாறிப் புகார் அளித்துக் கொண்டனர்.
ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், விதிமுறைப்படி ஏ.சி.சி தலைவரிடம் இருந்து கோப்பையை வாங்க வேண்டும். தற்போது ஏ.சி.சி தலைவராக இருப்பவர் மோஷின் நக்வி. இவர் பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பின் தலைவராக இருப்பதோடு, பாகிஸ்தான் நாட்டின் உள்துறை அமைச்சராகவும் இருக்கிறார்.
சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்கள் மற்றும் எல்லை விவகாரங்களில் மோஷின் நக்வி இந்தியாவிற்கு எதிராகப் பல்வேறு கருத்துகளையும் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அசாதாரணமான சூழ்நிலையில் தான், இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், மோஷின் நக்வியிடம் இருந்து கோப்பையை வாங்க மறுத்தார்.
இந்திய அணியின் மறுப்பால் பரிசளிப்பு விழா நீண்ட நேரம் தாமதமானது. பாகிஸ்தான் வீரர்கள் நீண்ட நேரத்திற்குப் பிறகு தங்கள் ஓய்வறையில் இருந்து வெளியே வந்த பிறகும், விழா துவங்கவில்லை. மேடையில் இருந்த மோஷின் நக்வி தனது தொலைபேசியில் யாரிடமோ கோபமாகப் பேசிக் கொண்டிருந்தார்.
இந்திய அணி நிர்வாகம், "மோஷின் நக்வி கோப்பையை வழங்கினால் தாங்கள் அந்தக் கோப்பையை வாங்க மாட்டோம் என்றும், அப்படி வற்புறுத்தி கோப்பையை அளிக்க நினைத்தால் அதற்கு எதிராகப் புகார் அளிப்போம்" என்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நிர்வாகத்திடம் திட்டவட்டமாகக் கூறியதாகப் பின்னர் தகவல் வெளியானது. இந்தத் தகவல் மோஷின் நக்விக்குச் சொல்லப்பட்ட பிறகு, மேடையில் இருந்த ஆசிய கோப்பையானது அங்கிருந்து உள்ளே மீண்டும் எடுத்துச் செல்லப்பட்டது.
கோப்பையைப் பெற்றுக் கொள்ளாத இந்தியா:
அதன் பிறகுப் பரிசளிப்பு விழா துவங்கியது. ஆட்டநாயகன் விருதை இறுதிப் போட்டியில் சிறப்பாக ஆடிய திலக் வர்மா வென்றார். அதைத் தொடர்ந்து பாகிஸ்தான் கேப்டனும், தொடர் நாயகன் அபிஷேக் ஷர்மாவும் பேசினார்கள். அதன் பிறகு ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அமைப்பு ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது: "இந்திய கிரிக்கெட் அணி கோப்பையை இன்று பெற்றுக் கொள்ளாது." என்று கூறப்பட்டது.
அத்துடன் அந்தப் பரிசளிப்பு விழாவும் முடிவுக்கு வந்தது. இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மேடையில் பேசவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. வரலாற்று வெற்றியைப் பெற்றும், பாகிஸ்தான் உடனான அரசியல் சூழல் காரணமாக, இந்திய அணி இறுதிப் போட்டி மேடையில் கோப்பையைத் தனதாக்கிக் கொள்ளாமல் சென்றது, கிரிக்கெட் உலகின் புதிய சர்ச்சையாக மாறியுள்ளது.