லண்டன்: லெஜண்ட்ஸ் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் கேப்டன் யூனிஸ் கான் விக்கெட்டை வீழ்த்திய இர்பான் பதான் ஆக்ரோஷமாக கொண்டாடினார். ஆனால் போட்டி முடிவடைந்த பின் இருவரும் ஜாலியாக நட்புடன் உரையாடிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
லெஜண்ட்ஸ் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்று சாதனை படைத்துள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 156 ரன்களை சேர்த்தது. அதிகபட்சமாக மாலிக் 36 பந்துகளில் 41 ரன்களை சேர்த்தார். இந்திய அணி தரப்பில் அனுரீத் சிங் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன்பின் களமிறங்கிய இந்திய அணி 19.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்களை எடுத்து அபார வெற்றியை பெற்றது. சிறப்பாக ஆடிய ராயுடு 30 பந்துகளில் 50 ரன்களையும், யூசுப் பதான் 16 பந்துகளில் 30 ரன்களையும் விளாசினர். கோப்பையை வென்ற மகிழ்ச்சியில் இந்திய அணி வீரர்கள் உற்சாகத்தில் கொண்டாடி மகிழ்ந்தனர்.
இந்த போட்டியின் போது பாகிஸ்தான் அணியின் கேப்டன் யூனிஸ் கான் 10 பந்துகளில் 7 ரன்கள் எடுத்து விளையாடி இருந்தார். அப்போது பவுலிங் செய்த இர்பான் பதான், ஆஃப் ஸ்டம்ப் லைனில் பிட்ச் செய்து இன்ஸ்விங் செய்ய, அந்த பந்தை எதிர்கொள்ள முடியாமல் யூனிஸ் கான் போல்டாகி வெளியேறினார். யூனிஸ் கான் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் இர்பான் பதான் ஆக்ரோஷமாக கொண்டாடினார்.
இந்த வீடியோ சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது. இதனை பகிர்ந்த பாகிஸ்தான் ரசிகர்கள் பலரும், இர்பான் பதான் உலகக்கோப்பையை வென்றது போல் கொண்டாடுகிறார்.. இவ்வளவு ஆக்ரோஷம் தேவையில்லை என்று பதிலடி கொடுத்து வந்தனர். ஆனால் ஆட்டம் முடிவடைந்த பின் இர்பான் பதான், யூனிஸ் கான் மற்றும் யூசுப் பதான் மூவரும் இணைந்து சிரித்து மகிழ்ந்து கொண்டாடினர்.
கிரிக்கெட் வீரர்கள் களத்தில் ஆக்ரோஷமாக இருந்தாலும், களத்திற்கு வெளியில் நட்புடன் இருப்பது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு இந்திய அணி பாகிஸ்தானுக்கு பயணிக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், இரு அணிகளின் ஜாம்பவான் வீரர்களும் நட்புடன் இருப்பது இரு அணி ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.