துபாய்: 2025 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணியின் சுழற் பந்துவீச்சாளர்கள் வருண் சக்கரவர்த்தி, அக்சர் படேல் மற்றும் குல்தீப் யாதவ் எதிர்பாராத வகையில் அபாரமான தாக்கத்தை ஏற்படுத்தி, போட்டியில் மிகப் பெரிய திருப்பத்தை உருவாக்கினர். அதலும் குல்தீப் யாதவ் ஒரே ஓவரில் மூன்று விக்கெட்டுகளைச் சாய்த்து, பாகிஸ்தான் அணியைத் திணறடித்தார். முதலில் நம்பிக்கையுடன் துவங்கிய பாகிஸ்தான் அணி, பிற்பகுதியில் வரிசையாக விக்கெட்டுகளை இழந்து ரன் குவிக்க முடியாமல் திணறியது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்று பந்து வீச்சைத் தேர்வு செய்த இந்திய அணி, காயம் காரணமாக விலகிய ஹர்திக் பாண்டியா இல்லாமல் விளையாடியது. அவருக்குப் பதிலாகக் கூடுதலாக பேட்ஸ்மேனான ரிங்கு சிங்கை அணியில் சேர்த்திருந்தது. இதனால், பந்து வீச்சில் இந்திய அணி பின்னடைவைச் சந்திக்கலாம் என்ற அச்சம் இருந்தது. எனினும், பவர்பிளேவில் பந்து வீசிய சிவம் துபே அதிக ரன்களை விட்டுக் கொடுக்காமல் நம்பிக்கையளித்தார்.

அதன் பிறகு பத்தாவது ஓவர் வரை இந்திய அணியால் விக்கெட் வீழ்த்த முடியவில்லை. பத்தாவது ஓவரில் வருண் சக்கரவர்த்தி, துவக்க வீரர் சாஹிப்சாதா ஃபர்ஹான் விக்கெட்டை வீழ்த்தினார். அதன் பிறகு குல்தீப் யாதவ் ஒரு விக்கெட்டை வீழ்த்த, வருண் சக்கரவர்த்தி மீண்டும் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். மூன்று விக்கெட்டுகள் வீழ்ந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் ரன் குவிக்கும் வேகம் சரிந்தது.
இந்த நிலையில், சுழற்பந்து வீச்சாளர்கள் ஆட்டத்தைக் கைப்பற்றினர். அக்சர் படேல் தான் வீசிய 14வது ஓவரில் முகமது ஹாரிஸ் விக்கெட்டை சாய்த்தார். அடுத்து தான் வீசிய 16வது ஓவரில் ஹுசைன் தலாத் விக்கெட்டை வீழ்த்தினார். அடுத்ததாக, 17வது ஓவரில் குல்தீப் யாதவ் மூன்று விக்கெட்டுகளைச் சாய்த்து மாபெரும் திருப்பத்தை ஏற்படுத்தினார். அந்த ஓவரின் முதல் பந்து, நான்காவது பந்து மற்றும் ஆறாவது பந்தில் பாகிஸ்தான் அணியின் பின்வரிசை பேட்ஸ்மேன்கள் வரிசையாக ஆட்டமிழந்தனர்.
அதன் பின்னர் பாகிஸ்தான் அணியால் ரன் குவிக்க முடியவில்லை. 18வது ஓவரில் பும்ரா, அணியின் ஒன்பதாவது விக்கெட்டையும் வீழ்த்தினார். சுழற்பந்து வீச்சாளர்களின் அபாரமான செயல்பாட்டால், ஹர்திக் பாண்ட்யாவின் இழப்பால் ஏற்பட்ட பந்து வீச்சுச் சிக்கலை இந்திய அணி லாவகமாகச் சமாளித்தது. பாகிஸ்தான் அணி 20வது ஓவரின் முதல் பந்திலேயே அனைத்து விக்கெட்களையும் இழந்து 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. வருண் சக்கரவர்த்தி 2, அக்சர் பட்டேல் 2, பும்ரா 2, குல்தீப் யாதவ் 4 விக்கெட்களை வீழ்த்தி இருந்தனர்.