துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதிப் போட்டியில் இன்று இந்தியா, பாகிஸ்தான் அணிகள் பலப்பரிட்சை நடத்துகின்றன. இந்த தொடரில் இந்தியா ஏற்கனவே லீக் சுற்று மற்றும் சூப்பர் ஃபோர் சுற்றில் பாகிஸ்தானை எளிதில் வீழ்த்தி இருக்கிறது.
இந்த நிலையில் வெற்றியை பெரும் முனைப்புடன் இந்திய அணி உள்ளது. டி20 சர்வதேச கிரிக்கெட்டை பொறுத்தவரை பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி 12 வெற்றிகளை பெற்று வெறும் மூன்று தோல்விகளை மட்டுமே சந்தித்திருக்கிறது.

இதனால் இந்தியாவை வெற்றி பெற அதிக வாய்ப்பு இருக்கிறது. இந்த தருணத்தில் இந்தியாவை வீழ்த்த பாகிஸ்தான் இரண்டு சிறப்பு திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி முதலாவது திட்டமாக இந்திய அணியின் நம்பிக்கையை குலைக்கும் விதத்தில் களத்தில் பாகிஸ்தான் வீரர்கள் நடந்து கொள்ள திட்டம் போட்டு இருக்கிறார்கள்.
மேலும் இந்திய வீரர்களின் கவனத்தை சிதறடிக்கும் வகையில் பேசி அதன் பிறகு அவர்களை ஆட்டம் இழக்க வைக்க முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சூப்பர் ஃபோர் சுற்றில் பாகிஸ்தான் வீரர்கள் பல செயல்களில் இதுபோல் ஈடுபட்டிருந்தனர் என்பது இங்கு கவனிக்கத்தக்கது.
இதன் மூலம் இந்திய வீரர்களை கோபப்படுத்தி விக்கெட்டுகளை வீழ்த்த முடியும் என பாகிஸ்தான் திட்டமிட்டு இருக்கிறது. இரண்டாவது திட்டமாக பாகிஸ்தான் அணியில் வேகப்பந்துவீச்சாளர்கள் குறைந்தது ஒரு ஓவருக்கு மூன்று யாக்கர் பந்துகள் யாவது வீச வேண்டும் என முடிவெடுத்திருக்கிறார்கள்.
குறிப்பாக ஷாகின் ஆப்ரிடி வழக்கமான இன் ஸ்விங் யாக்கர்களை பயன்படுத்தி இந்தியாவில் விக்கெட்டுகளை வீழ்த்த திட்டமிட்டுள்ளார். இதுபோன்று மற்ற பவுலர்களும் இன்று அதிக அளவு யாக்கர் பந்துகளையும், ஆடுகளும் தொய்வாக மாறி இருந்தால் பந்தின் வேகத்தை குறைத்து ஷார்ட் பாலையும் வீச திட்டமிட்டு இருக்கிறார்கள். மேலும் விக்கெட்டை விரைவில் வீழ்த்தி மற்ற வீரர்களுக்கு நெருக்கடி கொடுக்கலாம் என்பது தான் பாகிஸ்தான் அணியின் முடிவாக இருக்கிறது.