மும்பை: இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் இருக்கும் வரை கிரிக்கெட்டில் கூட பகை இருக்கும் என அந்நாட்டு முன்னாள் கேப்டன் ரசீத் லிதிப் தெரிவித்துள்ளார். இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆசிய கோப்பை இறுதிப்போட்டி துபாயில் நடைபெறுகிறது. இந்த தொடரில் ஏற்கனவே பாகிஸ்தானை இரண்டு முறை இந்தியா வெற்றி பெற்ற நிலையில், ஹாட்ரிக் முனைப்புடன் இந்தியா களமிறங்கியுள்ளது.
இந்த நிலையில் பாகிஸ்தான் அணி தற்போது டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடாததால் எங்களுக்கு அவர்கள் ஒரு போட்டியே கிடையாது என்பது போல் சூரியகுமார் யாதவ் பேசி இருந்தார். இது குறித்து பேசிய முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் ரஷித் லதிப் இரு நாடுகளுக்கும் இடையிலான போர் இருக்கும் வரை கிரிக்கெட்டிலும் பகையும் போட்டியும் நிச்சயம் இருக்கும்.

இது முடிவுக்கு வராது, உண்மையை சொல்ல வேண்டுமென்றால் இந்தியாவும் தொடர்ந்து வெற்றி பெறும் அதில் எந்த பிரச்சினையும் கிடையாது. இந்தியா வென்றாலும் சரி இரு நாடுகளுக்கும் இடையிலான போட்டியும் பகையும் நிச்சயம் இருக்கும். அது கண்டிப்பாக தொடரும். இந்தியாவுக்கு பல பாதகமான விஷயங்கள் இருக்கின்றது.
ஆனால் பாகிஸ்தானுக்கு இழக்க ஒன்றுமே இல்லை. ஆனால் இந்தியாவுக்கு தான் இழக்க நிறைய இருக்கின்றது. பாகிஸ்தான் இந்த போட்டியில் ஒரு எதிர்பார்ப்பும் இல்லாத அணியாக தான் விளையாடுகிறார்கள். ஒருவேளை இந்த போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றால், அது இந்தியாவுக்கு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தும். கில், சூரிய குமார் யாதவ் போன்றோர் பாகிஸ்தான் போட்டி குறித்து பல கருத்தை தெரிவித்து விட்டார்கள்.
இதனால் இந்த தோல்வி அவர்களுக்கு பிரச்சனையை ஏற்படுத்தலாம். திறமையை எடுத்துக் கொண்டால் பாகிஸ்தானை விட இந்திய வீரர்களை முன்னிலையில் இருக்கின்றார்கள். எவ்வளவு பெரிய நெருக்கடியையும் சமாளிக்க கூடிய பக்குவம் இந்தியாவுக்கு இருக்கின்றது. இன்றைய ஆட்டத்தில் யார் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம். எனவே இந்த போட்டி நிச்சயம் கண்டிப்பாக இருக்கும் என்று ரசித் லத்திப் கூறினார்.
பைனல் குறித்து பேசிய பாகிஸ்தான் அணி கேப்டன் சல்மான் ஆகா, இறுதிப்போட்டியில் இறைவன் நாடினால் நாங்கள் வெற்றி பெறுவோம். சிறந்த கிரிக்கெட்டை விளையாட நாங்கள் முயற்சி செய்வோம். எங்களுடைய திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி எங்களுடைய திட்டத்தை சரியாக நடைமுறைப்படுத்தினால், நிச்சயம் நாங்கள் உலகின் எந்த அணியையும் வீழ்த்த முடியும் என்று எங்களுக்கு தெரியும். அதை நாங்கள் கண்டிப்பாக செய்வோம் என்று சல்மான் ஆகா கூறியிருந்தார்.