துபாய்: ஆசிய கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணி ஒரு கட்டத்தில் தடுமாறியது. இந்திய அணியின் நட்சத்திர தொடக்க வீரர்கள் அபிஷேக் ஷர்மா ஐந்து ரன்களிலும் கேப்டன் சூரியகுமார் ஒரு ரன்னிலும், கில் 12 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். இதனால் 20 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது.
அப்போது அணியை கட்டமைக்கும் பணி சஞ்சு சாம்சன் தலையில் வந்து விழுந்தது. எனினும் அதைப் பற்றி கொஞ்சம் கூட பயப்படாத சஞ்சு சாம்சன் களத்திற்கு வந்து ஒரு சிக்சர் இரண்டு பவுண்டரி என தைரியமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 21 பந்துகளில் 24 ரன்கள் சேர்த்தார்.

இது ஆட்டத்தில் இந்தியாவுக்கு சாதகமாக அமைந்தது முதலில் போட்டியை வென்ற பிறகு வெற்றி கொண்டாட்டத்தில் பேசிய சஞ்சு சாம்சன் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார். அப்போது கேள்வி கேட்ட சஞ்சய் மஞ்சரேக்கர், சமீப காலமாக பாகிஸ்தான் இந்தியா போட்டிகள் ஒரு தலைப்பட்சமாக முடிவடைந்து விடுகிறது.
இப்போ கடும் நெருக்கடி இந்த ஆட்டத்தில் ஏற்பட்டது. உங்களுக்கு நெருக்கடி பிடித்திருக்கிறதா? இல்லை ஒருதலைபட்சமான போட்டிகள் பிடித்திருக்கிறதா என்று கேள்வி கேட்டார். இதற்கு பதில் அளித்த சாம்சன் நெருக்கடியான இருக்கும் போட்டிகள் தான் பிடிக்கிறது. இந்த நெருக்கடியை நான் மகிழ்ச்சியாக எதிர்கொண்டேன். இந்தியா பாகிஸ்தான் போட்டிகளில் நான் அதிக அளவு விளையாடியது கிடையாது.
ஆனால் எப்போதுமே அழுத்தம் இருக்கும். இதில் என்னுடைய அனுபவத்தை பயன்படுத்தி பதற்றப் படாமல் பந்தை பார்த்து நான் அடித்தேன். இன்று என்னால் முடிந்ததை நினைத்து மகிழ்ச்சி கொள்கின்றேன். திலக் வர்மாவுடன் இணைந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தோம். ஒவ்வொரு போட்டியிலும் பேட்ஸ்மேன் எந்த மாதிரி ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று போட்டி சூழல் தான் முடிவு செய்யும்.
இதை போன்று களத்தில் சூழலையும் போட்டியின் சூழலையும் நாம் மதிப்பளித்து விளையாட வேண்டும். இவ்வளவு ஆண்டுகளாக நான் விளையாடி வருகின்றேன். ஐபிஎல் தொடரில் பல போட்டிகளில் விளையாடி இருக்கின்றேன். இதையெல்லாம் தான் நான் கற்றுக் கொண்டிருக்கின்றேன். பந்தை பார்த்து சரியாக விளையாட வேண்டும். அப்படி செய்தால் தான் ரன்கள் கிடைக்கும்.
இதுபோன்று பரபரப்பு நிறைந்த போட்டிகள் தான் எனக்கு பிடித்திருக்கிறது. இதுதான் இந்தியா, பாகிஸ்தான் போட்டிக்கு நல்லதாக இருக்கும். இது போன்ற சூழ்நிலையில் தான் உங்களுடைய திறன், கேரக்டர் சோதிக்கப்படும். உங்களுடைய மன வலிமையும் கேள்விக்கு உள்ளாக்கப்படும். இந்த போட்டி டி20 உலக கோப்பைக்கு முன் எங்களுக்கு மிகவும் முக்கியமாக இருந்தது.