துபாய்: ஆசிய கோப்பை இறுதி போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சூரியகுமார் யாதவ் செய்த ஒரு சம்பவம் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த தொடரில் பாகிஸ்தான் அணியை லீக் சுற்று மற்றும் சூப்பர் ஃபோர் என இரண்டு முறை இந்திய அணி வீழ்த்தி இருக்கிறது.
தற்போது மூன்றாவது முறையாக பாகிஸ்தானை இந்தியா எதிர்கொள்கிறது. இந்த நிலையில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர்கள் அபாரமாக விளையாடி முதல் விக்கெட்டுக்கு 84 ரன்கள் சேர்த்தனர்.

இதை அடுத்து பாகிஸ்தான் அணி வழக்கும் போல் பேட்டிங்கில் தடுமாறி விக்கெட்டுகளை இழந்தது. ஆடுகளம் தோய்வாக இருப்பதால் பாகிஸ்தானை மிகக் குறைந்த ஸ்கோரில் சுருட்ட வேண்டும் என்ற உத்வேகத்தில் இந்திய அணி இருந்தது. இந்த நிலையில் தான் சூரியகுமார் யாதவ் செய்த ஒரு சம்பவம் விமர்சனத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆட்டத்தின் 16.1 வது ஓவரில் அக்சர் பட்டேல் வீசிய பந்தை பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி அடித்தார். அந்த பந்தை எக்ஸ்ட்ரா கவர் பகுதியில் நின்ற கேப்டன் சூரியகுமார் தடுத்து பந்தை மீண்டும் எரிந்து ரன் அவுட் செய்யும் முயற்சித்தார். அப்போது கிரீசுக்கு மீண்டும் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் திரும்பியபோது அந்த பந்து அவர் மீது பட்டது. இதனால் அவர் ஆட்டம் இழக்கவில்லை.
இதனால் கடுப்பான சூரியகுமார் யாதவ் நடுவரிடம் சென்று முறையிட்டார். அவர் வேண்டுமென்றே பந்தை தடுத்து விட்டதாகவும் இதற்கு அவுட் வழங்க வேண்டும் என்றும் அவர் கூறினார். இதனை அடுத்து சல்மான் அலி வேண்டுமென்றே பந்தை தடுத்தாரா என்று ரீப்ளேவில் மூன்றாம் நடுவர்கள் சோதனை செய்தனர்.
அப்போது அவர் வந்து வந்த திசையை பார்க்கவில்லை என்றும் கிரிஸ்க்கு திரும்ப தான் அவர் முயற்சி செய்தது தெரியவந்தது. இதனை அடுத்து சூரியகுமார் யாதவ் கோரிக்கையை மூன்றாம் நடுவர் நிராகரித்தார். அப்போது கிரிக்கெட் வர்ணணையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வசிம் அக்ரம் மற்றும் சஞ்சய் மஞ்சுரேக்கர், இந்த விவகாரத்தில் சல்மான் அலி செய்தது தவறில்லை என்றும், விக்கெட் எடுக்க வேண்டும் என்பதற்காக சூரியகுமார் யாதவ் இவ்வாறு செய்திருக்கலாம் என்று கருத்து தெரிவித்தனர்.