துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் தடுமாறிய நிலையில் திலக் வர்மா அபாரமாக விளையாடி அணியை தோல்வியிலிருந்து காப்பாற்றி இருக்கிறார்.
10 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்த போது திலக் வர்மா, கில்லுடன் ஜோடி சேர்ந்தார். ஆனால் இதில் 12 ரன்களில் வெளியேறினார். இதனால் 20 ரன்களுக்கு இந்தியா மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. சஞ்சு சாம்சனுடன் பார்ட்னர்ஷிப் சேர்த்து திலக் வர்மா அணியை சரி விலிருந்து மீட்ட நிலையில் அதுவும் பெரிய அளவு கை கொடுக்கவில்லை.

ஒரு கட்டத்தில் 77 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறிய போது திலக் வர்மாவும், சிவம் துபேவும் அபாரமான பார்ட்னர்ஷிப் சேர்த்து அணிக்கு வெற்றியை வித்திட்டனர். இதில் கடைசிவரை ஆட்டமிழக்காமல் நின்ற திலக் வர்மா 53 பந்துகளில் 69 ரன்கள் சேர்த்தார். இதில் நான்கு சிக்சர்களும், மூன்று பவுண்டரிகளும் அடங்கும்.
இன்னும் சொல்லப்போனால் கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவைப்பட்டபோது திலக் வர்மா அடித்த ஒரு சிக்சர் போட்டியில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. இந்த தொடரில் சூரியகுமார் யாதவ் தொடர்ந்து தடுமாறும் நிலையில் திலக் வர்மாவால் தான் இந்திய அணி கோப்பையை வென்றது. இதனால் போட்டியை முடித்துவிட்டு திலக் வர்மா வந்தவுடன் சூரியகுமார் யாதவ் அவருக்கு தொப்பியை கழற்றிக்கொண்டு தலைவணங்கி மரியாதை செலுத்தினார்.
இதனை கொஞ்சமும் எதிர்பார்க்காத திலக் வர்மா கை எடுத்துக் கும்பிட்டு நன்றி தெரிவித்தார். இந்திய டி20 அணியில் தற்போது திலக் வர்மா முக்கிய இடத்தை வகிப்பதற்கு காரணமே சூரியகுமார் தந்த ஆதரவு தான் என்று அவர் பல பேட்டிகளில் கூறியிருந்தார். மேலும் சூரியகுமார் தான் தமக்கு மூன்றாவது இடத்தை வழங்கி ஊக்குவித்ததாகவும் திலக் வர்மா தெரிவித்திருந்தார்.
டி20 போட்டிகளில் முக்கியமான ஆட்டங்களில் எப்படி விராட் கோலி அணியை காப்பாற்றுவாறோ, அதே போல் திலக் வர்மா செயல்பட்டதாக ரசிகர்கள் பாராட்டியுள்ளனர். அது மட்டும் இல்லாமல் பாகிஸ்தானுக்கு எதிராக இது போன்ற பெரிய தொடர்களில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் திலக் வர்மா ஐந்தாவது இடத்தை பிடித்திருக்கின்றார்.