மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவும் சமீப காலமாக பெரிய அளவு ரன்கள் சேர்க்காமல் தடுமாறி வருகிறார். தற்போது நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் அவர் விளையாடிய கடைசி மூன்று இன்னிங்ஸில் 0, 5, 12 ஆகிய ரன்கள் தான் அவர் அடித்திருந்தார்.
இதனால் இந்திய அணி பேட்டிங் தடுமாற வாய்ப்பு இருப்பதாக பல முன்னாள் வீரர்கள் எச்சரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் சூரியகுமார் யாதவுக்கு ஆதரவாக தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் களத்தில் குதித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் சூரியகுமார் பற்றி பேசும்போது அவருடைய சராசரி கேப்டன் பொறுப்பை ஏற்ற பிறகு குறைந்து வருவதாக கூறுகிறார்கள். ஆனால் அதுதான் புதுவிதமான கிரிக்கெட் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். இனி யாரும் சராசரியை பற்றி டி20 கிரிக்கெட்டில் பேசவே கூடாது.
சூர்யா அணியை வழி நடத்துவது மட்டுமல்லாமல்,ரிஸ்க் எடுத்து ரன்களை குவித்து விளையாடும் போட்டியில் ஈடுபடுகிறார். இதன் மூலம் ரன்கள் தொடர்ந்து குவிப்பது என்பது கடினமாக மாறிவிடுகிறது. இதே பாணியை தான் ரோகித் சர்மா டி20 கேப்டனாக இருந்த போது செய்து வந்தார். அவர் தனது விக்கெட்டுக்கு மதிப்பு கொடுக்காமல் அதிரடி காட்டி அணிக்காக ரன்களை சேர்க்க வேண்டும் என்று தொடர்ந்து விளையாடினார்.
தற்போது அதே பாதையை தான் சூரியகுமார் யாதவும் பின்பற்றி வருகிறார் என நம்புகிறேன். அதேபோல் சூர்யா ஒரே இடத்தில் பேட்டிங் செய்வதும் கிடையாது. ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொரு இடத்தில் வருகிறார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்று அஸ்வின் கூறியுள்ளார்.
நடப்பு ஆண்டில் மட்டும் சூரிய குமார் யாதவும் 10 இன்னிங்ஸ் விளையாடி மொத்தமாகவே 99 ரன்கள் தான் அடித்திருக்கிறார். இதில் மூன்று முறை பாகிஸ்தானுக்கு எதிராக இந்த தொடரில் அதிகபட்சமாக அவர் ஆட்டம் இழக்காமல் 47 ரன்கள் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.