பிர்மிங்காம்: 2024 உலக லெஜெண்ட் சாம்பியன்ஷிப் டி20 தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. கடந்த பத்து ஆண்டுகளில் நடந்த இந்தியா - பாகிஸ்தான் போட்டிகளில் பெரிய சுவாரசியம் இல்லை என்ற கருத்து உள்ளது. ஆனால், 15 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் எப்படி அனல் பறக்கும் என்பதற்கு இந்த போட்டி சிறந்த உதாரணமாக இருந்தது.
15 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிகளில் பல்வேறு உரசல்கள், சீண்டல்கள் இருக்கும். அதனால், இரு அணி வீரர்களும் தங்களின் அதிகபட்ச திறனை வெளிக்காட்டி போட்டியில் வெல்ல வேண்டும் என ஆடுவார்கள். அதே போன்ற ஒரு சூழல் இந்த லெஜெண்ட் டி20 தொடரில் நடந்தது. இந்த போட்டியில், இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் வினய் குமாருக்கும், பாகிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன் சோஹைப் மக்சூத்-க்கும் இடையில் அந்த சம்பவம் நடந்தது.

இந்த போட்டியில், பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. அப்போது ஐந்தாவது ஓவரை வினய் குமார் வீசினார். ஒரு விக்கெட் இழந்திருந்த பாகிஸ்தான் அணி அதிரடியாக ஆடலாம் என திட்டமிட்டு இருந்தது. அதற்கு ஏற்ப சோஹைப் மக்சூத் ஐந்தாவது ஓவரில் அடுத்தடுத்து ஒரு சிக்ஸ் மற்றும் ஒரு ஃபோர் அடித்தார். அதனால், வினய் குமார் கடும் அழுத்தத்தில் இருந்தார். அதே ஓவரின் கடைசி பந்தில் சோஹைப் மக்சூத் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.
அவரது விக்கெட்டை வீழ்த்திய வினய் குமார், மக்சூத் முகத்துக்கு நேராக சென்று அவரை திட்டி வெளியே அனுப்பினார். விக்கெட் இழந்த ஏமாற்றத்தில் இருந்த மக்சூத், வினய் குமார் திட்டியதால், புலம்பிக் கொண்டே ஆடுகளத்தை விட்டு வெளியே சென்றார். அந்த காட்சிகளை நேரில் கண்ட ரசிகர்கள் அதை சுட்டி காட்டி தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்தினர். அதனால், ஆட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு இருந்தது.
அதே போல பாகிஸ்தான் அணியின் கேப்டன் யூனிஸ் கான் விக்கெட்டை இர்பான் பதான் வீழ்த்திய போதும் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. இர்பான் பதான் வீசிய அருமையான இன் ஸ்விங் பந்தை யூனிஸ் கான் தவற விட்டார். அந்த பந்து ஸ்டம்புகளை பதம் பார்த்தது. அந்த விக்கெட்டை வீழ்த்தியுடன் ஆக்ரோஷமாக கத்தினார் இர்பான் பதான். அதனால், யூனிஸ் கான் அதிருப்தி அடைந்தார். பின்னர் இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 156 ரன்கள் எடுத்தது. இந்திய அணி 19.1 ஓவரில் வெற்றி இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.