துபாய்: இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி என்பது ரசிகர்களுக்கு ஒரு திருவிழாவாக இருந்தாலும், அதன் பின்னால், பணத்திற்காகவும், அரசியல் பிரச்சாரத்திற்காகவும் பெரிய நாடகம் அரங்கேற்றப்படுவதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் அதெர்டன் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஐசிசி வேண்டுமென்றே, தனது வர்த்தக நலன்களுக்காக ஒவ்வொரு பெரிய தொடரிலும் இந்தியா - பாகிஸ்தான் போட்டிகள் நடப்பதை உறுதி செய்கிறது என்றும், இந்த நடைமுறைக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் அவர் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
இது பற்றி 'தி டைம்ஸ்' பத்திரிகையில் எழுதியுள்ள தனது கட்டுரையில், மைக்கேல் அதெர்டன் ஐசிசியின் செயல்பாடுகளைக் கடுமையாகச் சாடியுள்ளார். "இந்தியா-பாகிஸ்தான் போட்டி என்பது மிகப்பெரிய பொருளாதார மதிப்பைக் கொண்டது. அதனால்தான், ஐசிசி தொடர்களின் ஒளிபரப்பு உரிமம் சுமார் 3 பில்லியன் டாலர் போன்ற பிரம்மாண்ட தொகைக்கு விற்கப்படுகிறது. சர்வதேச இருதரப்புத் தொடர்களின் மதிப்பு குறைந்துவிட்டதால், ஐசிசி தொடர்களின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. எனவே, இந்தியா - பாகிஸ்தான் போட்டி அவர்களின் வருமானத்திற்கு மிக அவசியமாகிறது" என்று அவர் குறிப்பிடுகிறார்.
ஐசிசி தொடர்களுக்கான குழுக்கள் எப்படிப் பிரிக்கப்படுகின்றன என்பதில் எந்தவிதமான வெளிப்படைத்தன்மையும் இல்லை என்று அவர் குற்றம் சாட்டுகிறார். "பல ஆண்டுகளாக, ஐசிசி தொடர்களில் இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே குழுவில் இடம்பெறாமல் இருந்ததே இல்லை. இது ஒரு தற்செயல் நிகழ்வல்ல. ஒவ்வொரு தொடரிலும் குறைந்தபட்சம் ஒரு இந்தியா - பாகிஸ்தான் போட்டியையாவது நடத்திவிட வேண்டும் என்பதற்காக, வேண்டுமென்றே குழுக்கள் இப்படி அமைக்கப்படுவது அனைவரும் அறிந்த ரகசியம்" என்று அவர் விளாசியுள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த ஆசியக் கோப்பையில் அரங்கேறிய சர்ச்சைகளைச் சுட்டிக்காட்டும் அதெர்டன், இந்தப் போட்டி இப்போது வெறும் கிரிக்கெட்டாக மட்டும் இல்லை என்கிறார்.
"ஒரு காலத்தில், கிரிக்கெட் இரு நாடுகளுக்கும் இடையேயான தூதரக உறவுக்கு ஒரு பாலமாக இருந்தது. ஆனால், இப்போது அது இரு நாடுகளுக்கும் இடையேயான பதட்டங்களுக்கும், அரசியல் பிரச்சாரத்திற்குமான ஒரு கருவியாக (Proxy for Propaganda) மாறிவிட்டது" என்று அவர் தெரிவித்துள்ளார். ஆசியக் கோப்பையின்போது இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்புகளும், இரு அணி வீரர்களும் அரசியல்ரீதியாக சீண்டும் வகையில் நடந்து கொண்டதையே அவர் இவ்வாறு குறிப்பிடுகிறார்.
பணத்திற்காகவும், அரசியலுக்காகவும் கிரிக்கெட்டைப் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கூறும் அதெர்டன், இதற்கு ஒரு தீர்வையும் முன்வைக்கிறார். "ஒரு விளையாட்டு, தனது பொருளாதாரத் தேவைகளுக்காகப் போட்டி அட்டவணையைத் தீர்மானிப்பது நியாயமே இல்லை. இனிவரும் காலங்களில், ஐசிசி தொடர்களுக்கு முன்பு, அணிகளைத் தேர்வு செய்யும் குலுக்கல் முறை (Fixture Draw) வெளிப்படையாக நடத்தப்பட வேண்டும். அதில், இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே குழுவில் வரவில்லையா, பரவாயில்லை. விளையாட்டு உணர்வுதான் முக்கியம், பணமல்ல" என்று அவர் ஆலோசனை தெரிவித்துள்ளார்.