மும்பை: டி20 உலகக்கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியைப் புறக்கணிப்பதாகப் பாகிஸ்தான் அறிவித்துள்ள நிலையில், அது குறித்த கேள்விக்கு இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தந்த 'ரியாக்ஷன்' இணையத்தில் பரவி வருகிறது.
2026 டி20 உலகக்கோப்பைத் தொடருக்காக மும்பை செல்வதற்காக விமான நிலையம் வந்த கவுதம் கம்பீரைச் செய்தியாளர்கள் சூழ்ந்து கொண்டனர். அப்போது பாகிஸ்தான் அரசின் புறக்கணிப்பு முடிவு குறித்து அவரிடம் அடுக்கடுக்கான கேள்விகள் கேட்கப்பட்டன. வழக்கமாகப் பாகிஸ்தான் குறித்த கேள்விகளுக்குத் தனது பாணியில் காரசாரமான பதிலடி கொடுக்கும் கம்பீர், இம்முறை எந்தப் பதிலையும் அளிக்கவில்லை.

செய்தியாளர்களின் வாழ்த்துகளுக்கு மட்டும் நன்றி தெரிவித்த அவர், பாகிஸ்தான் விவகாரம் குறித்த கேள்விகளைக் காதில் வாங்கிக்கொள்ளாமல் நேரடியாக விமான நிலையத்திற்குள் சென்றுவிட்டார். பாகிஸ்தான் விவகாரத்தை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் அவர் சென்ற விதம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
2026 டி20 உலகக்கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் அணி பங்கேற்க அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால், பிப்ரவரி 15ஆம் தேதி கொழும்பில் நடைபெற இருந்த இந்தியாவுக்கு எதிரான போட்டியில் மட்டும் விளையாடக் கூடாது என்று தடை விதித்துள்ளது. குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, நெதர்லாந்து மற்றும் நமீபியா ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. வரும் பிப்ரவரி 7ஆம் தேதி பாகிஸ்தான் தனது முதல் போட்டியில் நெதர்லாந்தையும், இந்தியா தனது முதல் போட்டியில் அமெரிக்காவையும் எதிர்கொள்ள உள்ளன.
உலகக்கோப்பைக்கு முன்னதாக நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி இந்திய அணி உச்சக்கட்ட ஃபார்மில் உள்ளது. அதேபோல, ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி பாகிஸ்தான் அணியும் ஃபார்மில் உள்ளது. இருப்பினும், உலகக்கோப்பை வரலாற்றில் இந்தியாவுக்கே கை ஓங்கியுள்ளது. இதுவரை நடைபெற்ற 8 மோதல்களில் 7 முறை இந்தியாவே வெற்றி பெற்றுள்ளது.
கடந்த ஆண்டு (2025) நடைபெற்ற ஆசிய கோப்பைத் தொடரில் கூட, இறுதிப்போட்டி உட்பட மூன்று முறையும் பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தியது. அந்தத் தொடரில் இளம் வீரர்களான அபிஷேக் சர்மா மற்றும் திலக் வர்மா ஆகியோர் பாகிஸ்தான் பந்துவீச்சைச் சிதறடித்தனர். குறிப்பாக இறுதிப்போட்டியில் திலக் வர்மா ஆட்டமிழக்காமல் 69 ரன்கள் குவித்து வெற்றி தேடித்தந்தது குறிப்பிடத்தக்கது.