கராச்சி: இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தனது சகோதரரை போன்றவர் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் கம்ரான் அக்மல் தெரிவித்துள்ளார். அதேபோல் இந்திய அணியின் ஜாம்பவானான தோனியை எப்போது சந்தித்தாலும், அவரிடம் ஆலோசனை கேட்பேன் என்றும் கூறியுள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் என்றால் பரபரப்புக்கு கொஞ்சம் கூட பஞ்சம் இருக்காது. அதிலும் கவுதம் கம்பீர் களத்தில் இருந்தால், பரபரப்பு உச்சத்தில் இருக்கும். அவர் ஏராளமான முறை பாகிஸ்தான் அணி வீரர்களுடன் மோதலில் ஈடுபட்டிருக்கிறார். அதிலும் விக்கெட் கீப்பர் கம்ரான் அக்மல் உடன் கம்பீர் மோதிய காட்சிகள் இன்றும் சோசியல் மீடியாவில் அதிகமாக பகிரப்படும்,

இந்த நிலையில் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கம்பீர் செயல்பட்டு வருகிறார். இதுகுறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் கம்ரான் அக்மல் பேசுகையில், நானும் கவுதம் கம்பீரும் சிறந்த நண்பர்கள். அவருடன் சிறந்த நட்புடன் இருக்கிறேன். அவர் எனக்கு ஒரு சகோதரரை போன்றவர். இந்திய அணியின் பயிற்சியாளராக முதல் டெஸ்ட் தொடரை வென்றதற்காக வாழ்த்து கூறிக் கொள்கிறேன்.
இந்திய அணி மிகச்சிறப்பாக வங்கதேச அணியை வீழ்த்தி அபார வெற்றியை பெற்றுள்ளது. அதிலும் 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஆடிய ஆட்டம் ஆச்சரியப்படுத்தியது. கம்பீருக்காக மகிழ்ச்சியடைகிறேன் என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து தோனி குறித்து கம்ரான் அக்மல் பேசுகையில், எந்த காலத்திலும் தோனி மிகப்பெரிய மேட்ச் வின்னராகவே பார்க்கிறேன்.
அதேபோல் மிகவும் நிதானமாக முடிவுகளை எடுக்கக் கூடிய மனிதர். இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய போது, அவருடன் ஏராளமான முறை உரையாடி இருக்கிறேன். பேட்டிங், விக்கெட் கீப்பிங் போன்ற விஷயங்கள் பற்றி பேசி இருக்கிறோம். அதுவொரு மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. அதேபோல் ஐபிஎல் தொடரின் போது தோனியிடம் இளம் வீரர்கள் பலரும் பல்வேறு கேள்விகளை கேட்கிறார்கள்.
அவரின் ஆலோசனைகளையும் பெறுகிறார்கள். நான் அவரை சந்திக்கும் போது அவரின் ஆலோசனைகளை கேட்டிருக்கிறேன். அவர் எப்போதும் சீனியர் வீரர் மட்டுமல்லாமல், மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர். கிரிக்கெட் தொடர்பான அவரின் அறிவும், புத்திசாலித்தனமும் பலரும் கற்க வேண்டிய ஒன்றாகும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் கம்ரான் அக்மலுடன் நட்பை தொடர்ந்து வருவதை கவுதம் கம்பீர் பலமுறை கூறியிருக்கிறார். ஒரு முறை பாகிஸ்தான் அணியுடன் விளையாடிய போது கம்ரான் அக்மலுக்கு பேட் ஒன்றை பரிசாக அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.