துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதிச்சுற்றில் பாகிஸ்தான் எதிராக இந்திய அணி வீரர்கள் பேட்டிங்கில் தடுமாறியதால் டென்ஷனான பயிற்சியாளர் கம்பீர் களத்திற்கு வந்து வீரர்களிடம் ஆக்ரோஷமாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த தொடரில் தோல்வியே தழுவாத இந்திய அணி இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை மூன்றாவது முறையாக எதிர்கொள்கிறது. ஏற்கனவே இரண்டு முறையில் இந்திய அணி வென்ற நிலையில், இந்த ஆட்டம் நடைபெற்றது.

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் 84 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டம் இழந்தனர். எனினும் அடுத்த வீரர்கள் அடுத்தடுத்து திரும்பியதால், அந்த அணி 146 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனை அடுத்து 147 ரன்கள் என்ற எளிய இலக்கை எதிர்கொண்டு இந்திய அணி விளையாடியது.
அப்போது பாகிஸ்தான் வீரர்கள் அபாரமாக பந்துவீசி இந்தியாவுக்கு நெருக்கடி கொடுத்தனர். இந்த இலக்கை எளிதில் எட்டி விடலாம் என நினைத்து அபிஷேக் ஷர்மா அதிரடியாக ஆட முற்பட்டு ஐந்து ரன்களில் ஆட்டம் இழந்தார். இதே போன்று கேப்டன் சூரியகுமார் யாதவ் ஒரு ரன்னிலும், கில் 12 ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேறினர்.
இதனால் இந்திய அணி 20 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகள் இழந்து தடுமாறியது. அப்போது களத்திற்கு வந்த சஞ்சு சாம்சன் மற்றும் திலக் வர்மா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவிலிருந்து மீட்டனர்ம் இந்த தருணத்தில் இடைவேளை வந்தது. அப்போது டென்ஷனாகி களத்திற்குள் வந்த கௌதம் கம்பீர் சஞ்சு சாம்சன் மற்றும் திலக் வர்மாவிடம் ஆக்ரோஷமாக பேசினார்.
கையை நீட்டி இருவருக்கும் ஏதோ கோபமாக கூறினார். இது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெற்று விட வேண்டும் என்றும் விக்கெட்டை இழந்து விடாதீர்கள் என்று கம்பீர் களத்திற்கே வந்து ஆக்ரோஷமாக பேசி இருக்கலாம் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவுக்கு இந்த வெற்றி எவ்வளவு முக்கியம் என்பதை கம்பீரின் இந்த செயல் காட்டுவதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.