துபாய்: துபாயில் நடைபெற்ற இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆசிய கோப்பை சூப்பர் ஃபோர் போட்டி முடிந்த பிறகு இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர், பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்கும் வழக்கமான சம்பிரதாயத்தைத் தவிர்த்து, கள நடுவர்களுடன் மட்டும் கைகுலுக்கச் சொல்லி வீரர்களுக்கு அறிவுறுத்தினார்.
முந்தைய போட்டியில் இந்திய வீரர்கள் போட்டி முடிந்த பின் ஓய்வறையை விட்டு வெளியே வரவில்லை. பாகிஸ்தான் வீரர்களுடன் கை குலுக்குவதை தவிர்க்கவே அவ்வாறு செய்தது இந்திய அணி. ஆனால், இந்த முறை ஓய்வறையை விட்டு வெளியே வந்த இந்திய அணியினர் செய்த செயல் பாகிஸ்தான் வீரர்களை மேலும் அதிர்ச்சி அடைய செய்தது.

முதலில் போட்டி தொடங்குவதற்கு முன்பு டாஸ் போடும்போதும், இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ்-உம், பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா-வும் கைகுலுக்கிக் கொள்ளவில்லை. இந்நிலையில், போட்டி முடிந்து இந்தியா வெற்றி பெற்றதும், வெற்றியை உறுதி செய்த திலக் வர்மா-வும், ஹர்திக் பாண்டியா-வும் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்காமல் நேராக உடைமாற்றும் அறைக்குத் திரும்பினர். ஆனால், அதன் பிறகு யாரும் எதிர்பாராத ஒரு திருப்பமாக, பயிற்சியாளர் கௌதம் கம்பீர், இந்திய வீரர்களை மீண்டும் களத்திற்கு வந்து நடுவர்களைச் சந்திக்குமாறு சைகை செய்தார்.
இதனையடுத்து, அபிஷேக் ஷர்மா, சுப்மன் கில் உள்ளிட்ட இந்திய வீரர்கள் அனைவரும் மீண்டும் களத்திற்குள் அணிவகுத்து வந்தனர். அவர்கள் பாகிஸ்தான் வீரர்களைக் கடந்து சென்று, போட்டியின் கள நடுவர்களை மட்டும் சந்தித்து கைகுலுக்கிவிட்டு, மீண்டும் உடைமாற்றும் அறைக்குத் திரும்பினர்.
இந்திய வீரர்களின் இந்தச் செயல், பாகிஸ்தான் வீரர்களை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியது. இந்திய வீரர்கள் தங்களுடன் கை குலுக்க வருவதாக எண்ணி இருந்த பாகிஸ்தான் வீரர்கள் சிலர் அவர்களை தவிர்த்து விட்டு அம்பயர்களுடன் கை குலுக்கியதை பார்த்து உறைந்து நின்றனர். இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
போட்டிக்குப் பிறகு, கம்பீர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்திய வீரர்களின் புகைப்படத்தைப் பகிர்ந்து, ஒற்றை வார்த்தையில் 'அச்சம் இல்லாதவர்கள்' (Fearless) என்று பதிவிட்டது, தனது நிலைப்பாட்டை உறுதி செய்வது போல அமைந்தது.
முன்னதாக, இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, தொடக்க ஆட்டக்காரர் சாஹிப்சாதா ஃபர்ஹான்-இன் 45 பந்துகளில் 58 ரன்கள் உதவியுடன், 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது.
ஒரு கட்டத்தில் பாகிஸ்தான் அணி 10 ஓவர்களில் 91 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தாலும், கடைசி 10 ஓவர்களில் இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்பட்டு 80 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். சிவம் துபே முக்கியமான கட்டங்களில் சிறப்பாகப் பந்துவீசி அசத்தினார். இந்திய அணி 18.5 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது.