கொழும்பு: 2026 டி20 உலகக்கோப்பைத் தொடரில் இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் அனல் பறக்கும் போட்டி நடைபெறவுள்ளது. ஆனால் போட்டி தொடங்குவதற்கு முன்பே பாகிஸ்தான் அணிக்கு ஒரு விசித்திரமான சம்பவம் நடந்துள்ளது. கொழும்பு மைதானத்தில் பாகிஸ்தான் வீரர்கள் அமரும் பகுதியில் பாம்பு ஒன்று புகுந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் இன்று (பிப்ரவரி 15) இந்தியா - பாகிஸ்தான் மோதல் நடைபெறுகிறது. இதற்காக நேற்றைய தினம் பாகிஸ்தான் வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

பயிற்சியின் போது பாகிஸ்தான் வீரர்கள் மற்றும் நிர்வாகிகள் அமரும் இடமான டக் அவுட் (Dug Out) பகுதியில், திடீரென ஒரு பாம்பு ஊர்ந்து செல்வதைக் கண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். மைதான ஊழியர்கள் உடனடியாக விரைந்து செயல்பட்டு, அந்தப் பாம்பைப் பாதுகாப்பாகப் பிடித்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. இதைப் பார்த்த ரசிகர்கள், போட்டிக்கு முன்பே பாகிஸ்தான் கூடாரத்தில் பாம்பு புகுந்ததை கிண்டல் அடித்து வருகின்றனர். போட்டிக்கு முன்பே பாகிஸ்தான் அணிக்கான முடிவு தெரிந்து விட்டது என்று கேலியாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பல்வேறு அரசியல் காரணங்கள் மற்றும் புறக்கணிப்பு நாடகங்களுக்குப் பிறகு இன்று இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைபெறுவது உறுதியாகியுள்ளது. குரூப் ஏ பிரிவில் இரு அணிகளும் தலா 4 புள்ளிகளுடன் தோல்வியே சந்திக்காமல் சமபலத்துடன் உள்ளன. ரன் ரேட் அடிப்படையில் இந்தியா முதலிடத்திலும், பாகிஸ்தான் இரண்டாவது இடத்திலும் உள்ளன.
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி அமெரிக்கா மற்றும் நமீபியா அணிகளை வீழ்த்தித் தன்னம்பிக்கையுடன் உள்ளது. அதேபோல பாகிஸ்தான் நெதர்லாந்து மற்றும் அமெரிக்காவை வீழ்த்தியுள்ளது. எனினும், டி20 உலகக்கோப்பை வரலாற்றில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவே ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
இதுவரை நடந்த 8 போட்டிகளில் இந்தியா 7 முறை வெற்றி பெற்றுள்ளது. பாகிஸ்தான் ஒருமுறை மட்டுமே வென்றுள்ளது. கொழும்பு மைதானத்தில் இன்று நடைபெறும் போட்டியிலும் இந்திய அணியே வெற்றி வாகை சூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.