துபாய்: இந்தியா - பாகிஸ்தான் ஆசிய கோப்பை போட்டி, முடிந்த பிறகும் கைகுலுக்கல் சர்ச்சை விஸ்வரூபம் எடுத்துள்ளது. பாகிஸ்தானை எளிதாக வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்ற பிறகு, இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க மறுத்ததும், இதற்குப் பதிலடியாக பாகிஸ்தான் கேப்டன் பரிசளிப்பு விழாவைப் புறக்கணித்ததும், கிரிக்கெட் உலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
2025 ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் குரூப் சுற்றில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியின் வெற்றி ரன்னை அடித்த பிறகு, களத்தில் இருந்த கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் சிவம் துபே ஆகியோர், பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்காமல் நேரடியாகப் பெவிலியன் திரும்பினர். இந்திய அணி கேப்டனே இவ்வாறு நடந்து கொண்டதை பார்த்த பாகிஸ்தான் வீரர்கள் அதிர்ச்சியில் இருந்தனர்.

வழக்கமாக, போட்டி முடிந்ததும் இரு அணி வீரர்களும் ஒருவரையொருவர் சந்தித்துக் கைகுலுக்கிக் கொள்வது கிரிக்கெட்டின் அடிப்படை நாகரிகமாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த முறை அந்தச் சம்பிரதாயம் முற்றிலுமாகத் தவிர்க்கப்பட்டது.
பெஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு எழுந்த எதிர்ப்புகளையும், மக்களின் உணர்வுகளையும் பிரதிபலிக்கும் விதமாகவே இந்திய வீரர்கள் இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது. போட்டிக்கு முன்னதாக சமூக வலைதளங்களில் எழுந்த "பாகிஸ்தானுடன் கைகுலுக்காதீர்கள்" என்ற கோரிக்கையை வீரர்கள் ஏற்றுக்கொண்டார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்திய வீரர்களின் இந்தச் செயலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அகா, போட்டிக்குப் பிந்தைய பரிசளிப்பு விழாவைப் புறக்கணித்தார். ஆட்ட நாயகன் மற்றும் வெற்றி பெற்ற கேப்டன் ஆகியோர் பேசும் இந்த முக்கிய நிகழ்வுக்கு, தோல்வியடைந்த அணியின் கேப்டன் வராதது, கிரிக்கெட் நெறிமுறைகளை மீறிய செயலாகப் பார்க்கப்படுகிறது. இந்திய வீரர்களின் செயல் தங்களை அவமதிப்பதாக இருந்ததாலேயே, சல்மான் அகா இந்த முடிவை எடுத்ததாக பாகிஸ்தான் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, இந்திய பந்துவீச்சாளர்களின் துல்லியமான தாக்குதலில் சிக்கி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு வெறும் 127 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும், அக்சர் படேல் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர்.
எளிய இலக்கைத் துரத்திய இந்திய அணி, தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மாவின் அதிரடியான 31 ரன்கள் மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவின் (47*) பொறுப்பான ஆட்டத்தால், 15.5 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. களத்தில் ஒருதலைப்பட்சமாக முடிந்த இந்த ஆட்டம், களத்திற்கு வெளியே இரு அணிகளுக்கும் இடையேயான உறவில் மேலும் ஒரு பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.