மும்பை: டி20 உலகக் கோப்பை 2026 போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு 130 ரன்களை இந்திய அணி இலக்காக நிர்ணயித்தாலும், அதனை சேஸ் செய்ய முடியாமல் தடுமாறி இருக்கும் என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். சல்மான் அலி அகா தலைமையிலான பாகிஸ்தான் அணி, 176 ரன்கள் இலக்கை துரத்திய போது வெறும் 114 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா 61 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
முதலில் பேட் செய்த இந்திய அணி, சவாலான பிட்ச்சில் சிறப்பாக விளையாடி 175/6 ரன்களை குவித்தது. இஷான் கிஷன் அதிரடியாக அரைசதம் அடித்து, பவர்பிளேயில் நடுவரிசை பேட்டர்களுக்கு ஒரு வலுவான அடித்தளத்தை அமைத்தார். பாகிஸ்தான் அணி சில விக்கெட்டுகளை வீழ்த்திய போதும், , இந்திய அணியை கட்டுப்படுத்த முடியவில்லை.

ரன் சேஸிங்கின் ஆரம்பம் முதலே பாகிஸ்தான் அணி கடும் நெருக்கடியைச் சந்தித்தது. இந்திய அணிக்கு எந்த சவாலையும் அவர்களால் முன்வைக்க முடியவில்லை. வெறும் இரண்டு ஓவர்களிலேயே 13 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தவித்த பாகிஸ்தான், இந்திய பந்துவீச்சின்காரணமாக 13வது ஓவரில் 78 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது.
இது குறித்து பேசிய ஹர்பஜன், "சுழற்பந்து வீச்சாளர்கள், பிட்ச்சின் நிலை, பவுண்டரி அளவு என பேசப்பட்ட அனைத்து பேச்சும் வீணாகின. இறுதியாக, இது ஒரு ஒருதலைப்பட்சமான போட்டியாக மாறி, இந்தியா வெற்றி பெற்றது. பாகிஸ்தான் இம்முறை சிறப்பாக போராடும், சிறந்த அணி அவர்களிடம் உள்ளது. இந்த மைதான நிலைமைகள் அவர்களுக்குத் தெரியும் என்றெல்லாம் பலர் பேசினர். உண்மை என்னவென்றால், இந்த இரண்டு அணிகளுக்கும் இடையே ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது."
"இது நடக்கும், அது நடக்கும் என்றெல்லாம் பேசினர். ஆனால் இறுதியில், எப்போது நடப்பதுதானோ, அதுவே நடந்தது. பும்ரா புதிய பந்துடன் பந்துவீச வேண்டும். பும்ராவை போன்ற ஒரு பந்துவீச்சாளர் இருக்கும்போது, எதிரணி அஞ்சும். இன்று அவர் பந்துவீசிய விதம், இரண்டு ஓவர்களிலேயே போட்டியின் கதையை முடித்துவிட்டது. இந்த பிட்ச்சில் பாகிஸ்தான் 130 ரன்களை சேஸ் செய்ய வேண்டியிருந்தாலும் தடுமாறியிருக்கும். ஹர்திக் பாண்டியா முதல் விக்கெட்டை எடுத்தது மிக முக்கியம்" என்று ஹர்பஜன் கூறினார்.
"பாகிஸ்தான், மீண்டும் ஒருமுறை, வெறும் பங்கேற்க மட்டுமே வந்தது. அவர்கள் போட்டியை வெல்ல வரவில்லை. அவர்களிடம் வெற்றி பெறக்கூடிய அணி இல்லை. ஒரு காலத்தில் அவர்கள் போட்டியிடுவார்கள். ஆனால் இப்போது அப்படி செய்யக்கூடிய வீரர்கள் அவர்களிடம் இல்லை. ஐந்தாம் இடத்தில் பேட் செய்ய வேண்டிய வீரர் இன்னிங்ஸைத் தொடங்குகிறார் என்று அவர்களின் ஜாம்பவான்களே திட்டமிடலில் தவறு என்று கூறுகிறார்கள்" என்று ஹர்பஜன் விமர்சித்தார்.பாகிஸ்தான் அணி ஷாஹீன் அப்ரிடி மூலம் வெறும் இரண்டு ஓவர் வேகப்பந்து வீச்சை பயன்படுத்தியது. இதில் 31 ரன்கள் விட்டுக்கொடுக்கப்பட்டது.
இதற்கு மாறாக, இந்திய அணி ஐந்து ஓவர் வேகப்பந்து வீச்சில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி, வெறும் 33 ரன்களை மட்டுமே கொடுத்தது. இது டி20 போட்டிகளில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவின் தொடர்ந்து ஆறாவது வெற்றியாகும். 2025 ஆசிய கோப்பையில் மூன்று முறை தோல்வியடைந்த பிறகு, ஐந்து மாதங்களில் இந்தியாவின் நான்காவது வெற்றி இது. இந்த வெற்றியின் மூலம், டி20 உலகக் கோப்பை 2026 இன் சூப்பர் 8 சுற்றுக்கு இந்திய அணி தகுதி பெற்றது. இந்தியாவின் அடுத்த மற்றும் கடைசி குரூப் போட்டி நெதர்லாந்துக்கு எதிராக, பிப்ரவரி 18 புதன்கிழமை அன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது.