நியூயார்க் : பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடியுள்ள 6 போட்டிகளில் இந்திய அணி வீரர் ஹர்திக் பாண்டியா அசத்தலாக செயல்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி அசத்தல் வெற்றியை பெற்றுள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றிபெற பும்ரா, ரிஷப் பண்ட் உள்ளிட்டோர் முக்கிய காரணமாக அமைந்தனர். அதேபோல் ஹர்திக் பாண்டியாவும் 4 ஓவர்களில் 24 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

சில வீரர்களுக்கு சில அணிகள் என்றாலே புதிய உற்சாகம் பிறந்துவிடும். ஆஸ்திரேலியா என்றால் விராட் கோலி, இலங்கை என்றால் ரோகித் சர்மா, மும்பை என்றால் பட்லர் என்று சில வீரர்கள் சில அணிகளுக்கு எதிராக தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள். அந்த வகையில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஹர்திக் பாண்டியாவின் செயல்பாடுகள் தொடர்ச்சியாக சிறப்பாக அமைந்துள்ளது.
2017ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியிலேயே ஹர்திக் பாண்டியா மிரட்டலான ஒரு இன்னிங்ஸை வெளிப்படுத்தி இருப்பார். அதேபோல் 2022ஆம் ஆண்டு ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் விராட் கோலியுடன் இணைந்து ஹர்திக் பாண்டியா அமைத்த பார்ட்னர்ஷிப் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
கடந்த ஆண்டு நடந்த உலகக்கோப்பை தொடரிலும் ஹர்திக் பாண்டியா பவுலிங்கில் மந்திரம் எல்லாம் போட்டு சில மேஜிக்கை நிகழ்த்தினார். தற்போது இந்த போட்டியிலும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி இருக்கிறார். இதுவரை பாகிஸ்தான் அணிக்கு எதிராக 6 இன்னிங்ஸ்களில் பவுலிங் செய்துள்ள ஹர்திக் பாண்டியா மொத்தமாக 13 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.
ஆட்டத்தின் முக்கியமான நேரங்களில் ஹர்திக் பாண்டியா தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். நேற்றைய ஆட்டத்தில் அதிரடி வீரரான ஃபகர் ஜமானை வீழ்த்தியதன் மூலம் ஆட்டத்தில் இந்திய அணியின் கைகள் ஓங்கியது. ஒருவேளை ஃபகர் ஜமான் விக்கெட்டை வீழ்த்தவில்லை என்றால், சிராஜ் மற்றும் அர்ஷ்தீப் சிங் பவுலிங்கில் நிச்சயம் சில சிக்சர்களை விளாசி இருப்பார். இதனால் ஹர்திக் பாண்டியா ஃபார்முக்கு வந்துவிட்டதாக ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.