கொழும்பு: 2026 டி20 உலகக்கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா 61 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மகிழ்ச்சிக்கு நடுவே, போட்டியின் கடைசி கட்டத்தில் இந்திய அணியின் ஆல் - ரவுண்டர் ஹர்திக் பாண்டியா சக வீரர்கள் மீது கடும் கோபத்தை வெளிப்படுத்திய சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியது.
பாகிஸ்தான் அணி தோல்வியின் விளிம்பில் இருந்தபோது, கேட்சை தவறவிட்டதற்காகக் குல்தீப் யாதவ் மற்றும் இஷான் கிஷன் ஆகியோரை ஹர்திக் பாண்டியா தகாத வார்த்தைகளால் திட்டியது ஸ்டம்ப் மைக்கில் பதிவானது.

இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 175 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணி, 17 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்குத் தடுமாறிக் கொண்டிருந்தது. கடைசி விக்கெட் மட்டுமே கைவசம் இருந்தது. ஆட்டத்தின் 18வது ஓவரை ஹர்திக் பாண்டியா வீசினார்.
அந்த ஓவரின் முதல் பந்தில் விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் ஒரு கேட்ச் வாய்ப்பை நழுவ விட்டார். அப்போது ஹர்திக் பாண்டியா முறைத்துப் பார்த்தார். அடுத்து இரண்டாவது பந்தை பாகிஸ்தான் வீரர் ஷாகின் அப்ரிடி லாங்-ஆன் திசையில் தூக்கி அடித்தார். அங்கு நின்றிருந்த குல்தீப் யாதவ், கையில் வந்த எளிதான கேட்சை தவறவிட்டார். அதுமட்டுமின்றி பந்து எல்லைக்கோட்டைத் தாண்டி சிக்ஸருக்கும் சென்றது.
தொடர்ச்சியாக பீல்டிங்கில் சொதப்பியதால் ஹர்திக் பாண்டியா நிதானத்தை இழந்தார். குல்தீப் யாதவ் கேட்சை விட்டதும், ஆவேசமான பாண்டியா குல்தீப் மற்றும் இஷான் கிஷன் ஆகியோரைப் பார்த்து இந்தியில் தகாத வார்த்தைகளால் திட்டினார். அவரது முகம் கோபத்தில் கொதித்தது. வெற்றி உறுதியாகிவிட்ட நிலையிலும், பாண்டியா இப்படி நடந்து கொண்டது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது.
கடைசி விக்கெட்
கோபத்துடன் பந்துவீசிய பாண்டியா, அதே ஓவரின் கடைசிப் பந்தில் உஸ்மான் தாரிக்கை போல்ட் செய்தார். மிடில் ஸ்டம்ப் பறக்க, பாகிஸ்தான் அணி 114 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. விக்கெட் விழுந்த பிறகும் பாண்டியா தனது கோபத்தை வெளிப்படுத்தும் விதமாகவே காணப்பட்டார்.
போட்டி முடிந்த சிறிது நேரத்தில் மைதானத்தில் காட்சிகள் மாறின. வெற்றிக்குப் பிறகு வீரர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்தனர். அப்போது ஹர்திக் பாண்டியா, இஷான் கிஷனின் தோளில் கைபோட்டு சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார். களத்தில் ஏற்பட்ட கோபம் மற்றும் மோதல் அங்கேயே முடிந்துவிட்டதை இந்தச் சம்பவம் உறுதி செய்தது.
இந்தப் போட்டியில் ஹர்திக் பாண்டியா பேட்டிங்கில் டக் அவுட் ஆனாலும், பந்துவீச்சில் சிறப்பாகச் செயல்பட்டார். 3.1 ஓவர்கள் வீசிய அவர், 16 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இந்தியா 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது.