துபாய்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய அணியில் நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியா 7 கோடி ரூபாய் மதிப்பில் வாட்ச் கட்டி இருந்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கிறது.
உலகமே எதிர்பார்த்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணி 241 ரன்கள் மட்டுமே எடுக்க இந்திய அணியில் விராட் கோலி அதிரடியாக விளையாடி தனது 51 வது சர்வதேச ஒருநாள் சதத்தை பூர்த்தி செய்தார்.

இதன் மூலம் இந்தியாவில் 45 பந்துகள் எஞ்சிய நிலையில் வெறும் நான்கு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இந்த போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஹர்திக் பாண்டியா, 8 ஓவர்கள் வீசி 31 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து இரண்டு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஹர்திக் பாண்டியாவின் எகனாமிக் 3. 87 என்ற அளவில் மட்டுமே இருந்தது. முக்கியமாக ஹர்திக் பாண்டியா பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் அசாமின் விக்கெட்டை வீழ்த்தி அவருக்கு டாடா காட்டினார். அப்போது ஹர்திக் பாண்டியாவின் கையில் கட்டி இருந்த வாட்ச் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்த வாட்ச் ஆரஞ்சு நிறத்தில் இருந்ததால் முதலில் அதனை ஆப்பிள் வாட்ச் என ரசிகர்கள் நினைத்தார்கள்.
ஆனால் இது விலை உயர்ந்த ரிச்சர்ட் மில்லி ஆரம் 27-02 வாட்ச் வகையை சேர்ந்தது என தெரிய வந்தது. இது உலகத்திலேயே வெறும் ஐம்பது வாட்ச் தான் தயாரிக்கப்பட்டிருக்கிறது. டென்னிஸ் ஜாம்பவான் ரஃபேல் நடாலுக்காக இந்த வாட்ச் உருவாக்கப்பட்டிருக்கிறது. பொதுவாக ஹர்திக் பாண்டியா இது போல் விலை உயர்ந்த வாட்ச்களை வாங்கி சேமித்து வைப்பது பழக்கம்.
2015 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை வெறும் மேகி உணவு மட்டும் சாப்பிட்டு வந்த ஹர்திக் பாண்டியா, தனது உழைப்பின் மூலம் முன்னேறி தற்போது விலை உயர்ந்த வாட்ச்களை கிரிக்கெட் போட்டிகளுக்கு கட்டி வரும் அளவுக்கு உயர்ந்திருப்பதாக ரசிகர்கள் பாராட்டியுள்ளனர். ஆனால் சிலர் இவ்வளவு விலை உயர்ந்த வாட்ச்களை வாங்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் இதனை ஹர்திக் பாண்டியா வேறு நல்ல காரியங்களுக்காக செயல்படுத்தலாம் என்றும் கூறியுள்ளனர்.