கொழும்பு : இந்திய அணிக்கு எதிராக மோதிய 2023 ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றுப் போட்டிக்கு பின் பாகிஸ்தான் அணி நிலைகுலைந்து போயுள்ளது.
அந்த அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர்கள் ஹாரிஸ் ரௌப் மற்றும் நசீம் ஷாவை பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

அவர்களுக்கு மாற்றாக ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்க ஷானவாஸ் தஹானி மற்றும் ஜமன் கான் என இரண்டு வேகப் பந்துவீச்சாளர்களை அழைத்துள்ளது அந்த அணி.
இந்தியா - பாகிஸ்தான் போட்டி : குரூப் சுற்றுப் போட்டியில் இந்திய அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணி சிறப்பாக பந்து வீசி இருந்தது. ஆனால், அந்தப் போட்டி மழை காரணமாக பாதியில் கைவிடப்பட்ட நிலையில், மீண்டும் சூப்பர் 4 சுற்றில் மோதிய போட்டிக்கு எதிர்பார்ப்பு எகிறியது. பாகிஸ்தான் தாங்கள் நிச்சயம் சிறப்பாக செயல்படுவோம் என எண்ணியது.
வீரர்கள் காயம் : ஆனால், நடந்ததோ வேறு. இந்திய அணி அதிரடி ஆட்டம் ஆடி பாகிஸ்தான் பந்துவீச்சை துவம்சம் செய்தது. 50 ஓவர்களில் இந்திய அணி 356 ரன்கள் குவித்தது. இந்த ஆட்டத்தின் போது பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர்கள் மனதளவில் சோர்ந்து போனார்கள். அத்துடன் முக்கிய வேகப் பந்துவீச்சாளர்களான ஹாரிஸ் ரௌப் மற்றும் நசீம் ஷா காயமடைந்தனர்.
திட்டம் காலி : அவர்கள் இருவரும் பாகிஸ்தான் அணியின் முக்கியமான வேகப் பந்துவீச்சாளர்கள் ஆவர். ஷஹீன் ஷா அப்ரிடியுடன் இவர்கள் இணைந்தால் எப்படிப்பட்ட அணியையும் வீழ்த்தலாம் என திட்டம் போட்ட பாகிஸ்தான் அணிக்கு இது பெரும் பின்னடைவாக மாறி உள்ளது.
உலகக்கோப்பை முக்கியம் : அடுத்து பாகிஸ்தான் அணி உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க வேண்டும் என்பதால் அதற்குள் ஹாரிஸ் ரௌப், நசீம் ஷா காயத்தில் இருந்து குணமடைய வேண்டி அவர்களை திருப்பி அனுப்பி உள்ளது. அவர்கள் தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பார்கள் என தெரிவித்துள்ளது.