லாகூர்: 2026 டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்தியாவுடன் விளையாடப் போவதில்லை என்று கூறிவந்த பாகிஸ்தான், தற்போது அதன் நிபந்தனைகள் எதுவும் ஏற்றுக் கொள்ளப்படாத நிலையிலேயே மீண்டும் இந்தியாவுடன் விளையாட ஒப்புக் கொண்டு இருக்கிறது. ஆனால், தாங்களாக மீண்டும் விளையாட ஒப்புக் கொண்டால் அவமானம் ஏற்படும் என்பதால் வங்கதேசத்தின் கோரிக்கையை ஏற்றுத்தான் மீண்டும் விளையாட ஒப்புக்கொண்டதாக ஒரு பிம்பத்தை உருவாக்கியுள்ளது. பாகிஸ்தான் இந்தியாவுடன் விளையாட வேண்டும் என வங்கதேசம் நேற்றுக் கூறியதே, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் நக்வி சொல்லித் தான் நடந்து இருக்கிறது.
இந்தியாவுடனான போட்டியைப் புறக்கணித்தால் ஐசிசியின் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்பதை பாகிஸ்தான் உணர்ந்திருந்தது. அதே சமயம், தாங்களாகவே முன்வந்து "நாங்கள் விளையாடுகிறோம்" என்று கூறினால், அது ஐசிசிக்கு பயந்து சரணடைந்தது போலாகிவிடும். தங்கள் கௌரவத்திற்கும் பாதிப்பு ஏற்படும்.

இந்தச் சிக்கலிலிருந்து கௌரவமாகத் தப்பிக்க மொஹ்சின் நக்வி ஒரு வழியைக் கண்டுபிடித்தார். அதுதான் வங்கதேச கிரிக்கெட் வாரியத் தலைவர் அமினுல் இஸ்லாம். லாகூருக்கு அமினுல் இஸ்லாமை வரவழைத்த நக்வி, "நாங்கள் இந்தியாவுடன் விளையாட வேண்டும் என்று நீங்களே ஒரு அதிகாரப்பூர்வ கோரிக்கையை வையுங்கள். அதை ஏற்று நாங்கள் விளையாடுவது போல அறிவிக்கிறோம்" என்று கூறியதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நக்வியின் திட்டப்படியே வங்கதேச கிரிக்கெட் வாரியத் தலைவர் அமினுல் இஸ்லாம் ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில், "எங்களுக்கு ஆதரவாகப் பாகிஸ்தான் எடுத்த முயற்சிக்குத் தலைவணங்குகிறோம். எங்கள் சகோதரத்துவம் என்றும் தழைத்தோங்கட்டும். இருப்பினும், உலக கிரிக்கெட்டின் நலன் கருதி, பிப்ரவரி 15ஆம் தேதி இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடுமாறு பாகிஸ்தானை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்தக் கோரிக்கையை வைத்துத்தான் பாகிஸ்தான் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது. இதன் மூலம், "நாங்கள் ஐசிசிக்கு பயந்து விளையாட வரவில்லை; எங்கள் நண்பன் வங்கதேசம் கேட்டுக்கொண்டதால், அவர்களின் வேண்டுகோளை ஏற்று விளையாடுகிறோம்" என்று உலகிற்குச் சொல்லிக் கொள்ள பாகிஸ்தானுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.
கொல்கத்தா அணியிலிருந்து முஸ்தபிசுர் ரஹ்மான் விடுவிக்கப்பட்ட விவகாரத்தில் தொடங்கிய இந்தப் பிரச்சினை, இறுதியில் ஒரு வார நாடகத்திற்குப் பிறகு, வங்கதேசத் தலைவரின் "முறையான வேண்டுகோள்" என்ற பெயரில் முடிவுக்கு வந்துள்ளது. 2026 டி20 உலகக்கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என்பதால் ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.