துபாய்: 17 ஆண்டுகளாக விராட் கோலியின் ஆட்டத்தை பார்த்து வருவதால், அவரின் சதம் தனக்கு எந்த ஆச்சரியத்தையும் அளிக்கவில்லை என்று இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். பவுலர்களின் பங்களிப்பை மறந்துவிடக் கூடாது என்று கூறிய ரோஹித் சர்மா, குல்தீப் யாதவின் பங்களிப்பு முக்கியமானது என்றும் கூறி இருக்கிறார்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றியை பெற்றுள்ளது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி 242 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்தது. இதனை இந்திய அணி 42.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 244 ரன்களை எடுத்து அபார வெற்றியை பெற்றுள்ளது.

சிறப்பாக ஆடிய விராட் கோலி 111 பந்துகளில் 100 ரன்களை விளாசி ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார். இந்த வெற்றியின் மூலமாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது. அதேபோல் பாகிஸ்தான் அணியை சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து வெளியேற்றி, 2017 தோல்விக்கு பழி வாங்கிவிட்டது.
இந்த வெற்றிக்கு பின் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேசுகையில், நாங்கள் பவுலிங்கை தொடங்கிய விதமே சிறப்பாக இரிந்தது. லைட்டுக்கு கீழ் பேட்டிங் செய்வது கொஞ்சம் எளிதானது என்பது எங்களுக்கு நன்றாக தெரியும். இங்கு ரன்களை சேர்ப்பதற்கு எங்களின் அனுபவம் மீது நம்பிக்கை வைத்தோம். அதேபோல் அக்சர் படேல், குல்தீப் மற்றும் ஜடேஜா ஆகிய மூவரையும் நிச்சயம் பாராட்ட வேண்டும்.
ஏனென்றால் முகமது ரிஸ்வான் மற்றும் சக்கீல் இருவரும் நல்ல பார்ட்னர்ஷிப்பை உருவாக்கி இருந்தனர். அந்த நேரத்தில் ஆட்டம் கைகளில் இருந்து நழுவாமல் கவனமாக இருக்க வேண்டும். அதனை சிறப்பாக செய்தனர். அதேபோல் ஹர்திக் பாண்டியா, ஹர்சித் ராணா மற்றும் முகமது ஷமி மூவரின் பங்களிப்பை மறக்க கூடாது. ஒருநாள் கிரிக்கெட்டில் நாங்கள் அனைவரும் இணைந்து நிறைய போட்டிகளில் விளையாடிவிட்டோம்.
சில நேரங்களில் இந்த வடிவம் கொஞ்சம் புதிராக மாறிவிடும். விராட் கோலி இந்திய அணிக்காக விளையாடுவதில் பெருமை கொள்பவர். அவர் களத்தில் எப்போது இறங்கி பேட்டிங் செய்வோம் என்று காத்திருந்தார். எத்தனையோ ஆண்டுகளாக விராட் கோலியின் ஆட்டத்தை பார்த்து வருகிறோம். அதனால் எங்களுக்கு எந்த ஆச்சரியமும் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.