நியூயார்க் : பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி சார்பாக அளிக்கப்படும் சிறந்த ஃபீல்டருக்கான விருதை ரிஷப் பண்ட்-க்கு அளித்த ரவி சாஸ்திரி பேசிய வீடியோ ட்ரெண்டாகி வருகிறது.
இந்திய அணியின் பயிற்சியாளர் டி திலீப் வந்த பின் ஐசிசி தொடர்களில் இந்திய அணி வீரர்களுக்கு சிறந்த ஃபீல்டருக்கான விருது அளிக்கப்பட்டு வருகிறது. இந்த வகையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் ரிஷப் பண்ட் 3 கடினமான கேட்ச்களை அசால்ட்டாக பிடித்து அசத்தினார். அதேபோல் அக்சர் படேல் மற்றும் ஜடேஜா இரு ஸ்பின்னர்களையும் எளிதாக சமாளித்தார்.

அர்ஷ்தீப் சிங், சூர்யகுமார் யாதவ் இருவரும் சிறப்பாக ஃபீல்டிங் செய்த போது, சிறந்த ஃபீல்டருக்கான விருது ரிஷப் பண்ட்-க்கு அளிக்கப்பட்டது. இந்த விருதை அளிப்பதற்காக ஃபீல்டிங் பயிற்சியாளர் திலீப், இந்திய முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியை ஓய்வறைக்கு அழைத்து வந்தார். இதனால் இந்திய அணி வீரர்கள் அனைவரும் கரகோஷம் எழுப்பி அவருக்கு வரவேற்பு அளித்தனர்.
அப்போது ரவி சாஸ்திரி பேசுகையில், முதலில் ரிஷப் பண்ட்-ஐ நான் கட்டுப்பிடித்து பாராட்ட விரும்புகிறேன். மிகச்சிறந்த ஆட்டத்தை அனைவரும் வெளிப்படுத்துனீர்கள். ரிஷப் பண்ட் விபத்து குறித்து அறிந்து போது என்னால் தாங்க முடியவில்லை. கண்களில் இருந்து கண்ணீர் வந்துவிட்டது. அதன்பின் ரிஷப் பண்ட்-ஐ மருத்துவமனையில் பார்த்த போது நிம்மதியே இல்லை.
ஆனால் அந்த நிலையில் இருந்து கம்பேக் கொடுத்து உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் போட்டியான இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்தில் விளையாடி இருக்கிறார். உண்மையை சொல்ல வேண்டுமென்றால், மகிழ்ச்சியாக இருக்கிறேன். ரிஷப் பண்ட் பேட்டிங் பற்றி அனைவருக்கும் நன்றாக தெரியும். இந்திய அணியின் எக்ஸ் ஃபேக்டர் அவர் தான்.
ஆனால் ஆபரேஷனுக்கு பின் விக்கெட் கீப்பிங்கில் வேகமாக நகர்வதை பார்த்த போது தான் ரிஷப் பண்ட் உழைப்பு தெரிகிறது. அது லட்சக்கணக்கான மக்களுக்கு ஊக்கமாக அமைந்துள்ளது. மரணத்தின் எல்லையில் இருந்து மேல் வந்து வென்றுள்ளோம். தொடர்ந்து சிறப்பாக விளையாடுங்கள் என்று தெரிவித்துள்ளார்.