துபாய்: 2026 டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியைப் புறக்கணிப்பதாகப் பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இந்த முடிவை மாற்றிக்கொள்ளும்படி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை வலியுறுத்த, ஐசிசி தனது துணைத் தலைவர் இம்ரான் கவாஜாவை ரகசிய தூதராக களமிறக்கியுள்ளது. இதற்கான ரகசிய பேச்சுவார்த்தைகள் அதிகாரப்பூர்வமற்ற வகையில் தீவிரமாக நடைபெற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வரும் சனிக்கிழமை டி20 உலகக்கோப்பைத் தொடர் தொடங்குகிறது. இதில் பங்கேற்க பாகிஸ்தான் அணிக்கு அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால், பிப்ரவரி 15ஆம் தேதி நடைபெறவுள்ள இந்தியாவுக்கு எதிரான போட்டியில் மட்டும் விளையாடக் கூடாது எனத் தடை விதித்துள்ளது. வங்கதேச விவகாரத்தில் ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்த முடிவை அவர்கள் எடுத்துள்ளனர்.

இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைபெறாவிட்டால் அது தொடருக்கே பெரிய பின்னடைவாக அமையும். எனவே, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் பேசி, அவர்களைச் சம்மதிக்க வைக்கும் பொறுப்பை ஐசிசி துணைத் தலைவர் இம்ரான் கவாஜாவிடம் ஒப்படைத்துள்ளது. சிங்கப்பூரைச் சேர்ந்த இவர், தற்போது பாகிஸ்தான் அதிகாரிகளுடன் திரைக்குப் பின்னால் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். எப்படியாவது போட்டியை நடத்திவிட வேண்டும் என்பதில் ஐசிசி உறுதியாக உள்ளது.
ஐசிசி அமைப்பின் தற்போதைய தலைவராக ஜெய் ஷா இருப்பதும் பாகிஸ்தான் இது போன்ற முடிவுகளை எடுக்க ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தான் ஐசிசி துணைத் தலைவர் இம்ரான் கவாஜா திரைமறைவில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடரை ஒளிபரப்பும் உரிமை பெற்றுள்ள நிறுவனமான ஜியோ ஸ்டார் (JioStar) ஐசிசியுடன் ஒப்பந்தம் செய்யும்போது, இந்தியா - பாகிஸ்தான் போட்டிகளை கணக்கில் கொண்டே பெரும் தொகையைக் கொடுத்துள்ளது. இப்போது பாகிஸ்தான் பின்வாங்கினால், அவர்கள் ஐசிசி மற்றும் பாகிஸ்தான் வாரியத்தின் மீது வழக்கு தொடர வாய்ப்புள்ளது.
ஒளிபரப்பு நிறுவனங்களுடனான ஒப்பந்தத்தை மீறியதற்காகப் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மிகப்பெரிய நஷ்ட ஈட்டைச் செலுத்த நேரிடும். மேலும், பாகிஸ்தானுக்கு வழங்கப்பட வேண்டிய சுமார் $35 மில்லியன் (சுமார் ₹290 கோடி) ஆண்டு வருவாயை ஐசிசி நிறுத்தி வைக்கவும் வாய்ப்புள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வி ஒரு அரசியல்வாதி என்பதால், பிப்ரவரி 12ஆம் தேதி அங்கு நடைபெறவுள்ள தேர்தல் காரணமாகவே இத்தகைய அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தேர்தல் முடிந்த பிறகு, பிப்ரவரி 15ஆம் தேதி போட்டிக்கு இன்னும் இரண்டு நாட்கள் இருக்கும் என்பதால், கடைசி நேரத்தில் பாகிஸ்தான் தனது முடிவை மாற்றிக்கொள்ளவும் வாய்ப்புள்ளது.
இது வெறும் தேர்தல் கால அரசியல் நாடகமாக இருக்கலாம் என்றும், தேர்தல் முடிந்ததும் நக்வி தனது முடிவை மாற்றிக்கொள்வார் என்றும் கிரிக்கெட் வட்டாரங்களில் பேசப்படுகிறது. மொத்தத்தில், இம்ரான் கவாஜாவின் பேச்சுவார்த்தை வெற்றி பெற்று இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைபெறுமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.