லாகூர்: இந்தியாவுக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் விளையாட வேண்டும் என்றால், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய மூன்று நாடுகள் மோதும் முத்தரப்புத் தொடரை நடத்த வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வி புதிய நிபந்தனை விதித்துள்ளார். ஆனால், இந்த கோரிக்கையைச் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) உடனடியாக நிராகரித்துள்ளது.
2026 டி20 உலகக்கோப்பைத் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பிப்ரவரி 15ஆம் தேதி நடைபெறவுள்ள இந்தியா - பாகிஸ்தான் போட்டி குறித்த குழப்பம் இன்னும் நீடிக்கிறது. வங்கதேசத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்தப் போட்டியைப் புறக்கணிப்போம் என்று பாகிஸ்தான் மிரட்டி வருகிறது.

லாகூரில் நடைபெற்ற ஐசிசி மற்றும் வங்கதேச கிரிக்கெட் வாரிய அதிகாரிகளுடனான சந்திப்பில், பாகிஸ்தான் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வி ஒரு புதிய கோரிக்கையை முன்வைத்துள்ளார். அதாவது, "பாகிஸ்தான் அணி உலகக்கோப்பையில் இந்தியாவுடன் விளையாட வேண்டும் என்றால், எதிர்காலத்தில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய மூன்று அணிகள் பங்கேற்கும் ஒரு முத்தரப்புத் தொடரை ஐசிசி ஏற்பாடு செய்து தர வேண்டும்" என்று கேட்டுள்ளார். இதன் மூலம் வங்கதேச கிரிக்கெட் வாரியத்திற்கு வருவாய் ஈட்டித் தரவும், இந்தியாவுடனான கிரிக்கெட் உறவை புதுப்பிக்கவும் பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
ஆனால், பாகிஸ்தானின் இந்தக் கோரிக்கையை ஐசிசி அடியோடு நிராகரித்துவிட்டது. இது குறித்து ஐசிசி தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், "எந்த நாட்டுடன் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்பது இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) மற்றும் இந்திய அரசாங்கம் எடுக்க வேண்டிய முடிவு. இதில் ஐசிசி தலையிட முடியாது. முத்தரப்புத் தொடர் நடத்துவது எங்கள் அதிகார வரம்பிற்குள் வராது" என்று திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஏற்கனவே கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தங்களின்படி (MPA) உலகக்கோப்பையில் பங்கேற்பது கட்டாயம் என்றும், இருதரப்புத் தொடர்களை நடத்துவது குறித்துப் பாகிஸ்தான் இப்போது கோரிக்கை வைக்க முடியாது என்றும் ஐசிசி அறிவுறுத்தியுள்ளது.
இதற்கிடையில், அரசியல் காரணங்களால் ஒத்திவைக்கப்பட்ட இந்தியா - வங்கதேசம் இடையிலான இருதரப்புத் தொடர் வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ளது. இந்தத் தொடரில் விளையாட இந்திய அணி வங்கதேசம் செல்லவுள்ளது.
2012-13ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஐசிசி தொடர்களில் மட்டுமே மோதி வருகின்றன. மும்பை தாக்குதலுக்குப் பிறகு இருதரப்புத் உறவு முறிந்துவிட்டது. தற்போது முத்தரப்புத் தொடர் என்ற புதிய கோரிக்கையையும் ஐசிசி நிராகரித்துவிட்டதால், பாகிஸ்தான் அடுத்து என்ன செய்யப்போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்தியாவுடனான போட்டியில் பங்கேற்பது குறித்த இறுதி முடிவை, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இன்று (திங்கட்கிழமை) மாலைக்குள் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐசிசியின் கடுமையான நிலைப்பாட்டால் பாகிஸ்தான் இறங்கி வர வாய்ப்புள்ளது.