இஸ்லாமாபாத்: 2026 டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியைப் புறக்கணிப்பதாகப் பாகிஸ்தான் அறிவித்துள்ள நிலையில், இந்த முடிவால் அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்திற்கு சுமார் 1300 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிப்ரவரி 15ஆம் தேதி கொழும்பில் நடைபெறவுள்ள இந்தியா - பாகிஸ்தான் லீக் போட்டியைப் புறக்கணிப்பதாகப் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இந்த முடிவு ஐசிசி விதிகளை மீறும் செயல் என்பதால், இதற்கான விளைவுகள் மிகக் கடுமையாக இருக்கும் எனத் தெரிகிறது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) 2024-2027 நிதியாண்டு சுழற்சியின்படி, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு சுமார் 144 மில்லியன் டாலர் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாணய மதிப்பில் இது சுமார் 40 பில்லியன் ரூபாய் (4000 கோடி பாகிஸ்தான் ரூபாய்). இந்திய மதிப்பில் இது ஏறக்குறைய 1300 கோடி ரூபாய் ஆகும்.

பாகிஸ்தான் அணி இந்தியாவுடனான போட்டியைப் புறக்கணித்தால், ஒப்பந்த விதிகளை மீறியதற்காக ஐசிசி இந்த நிதியை நிறுத்தி வைக்கலாம் அல்லது அபராதமாகப் பிடிக்கலாம். இந்த 40 பில்லியன் ரூபாயை நம்பித்தான் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமே இயங்கி வருகிறது. இந்த நிதி வரவில்லை என்றால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பொருளாதார ரீதியாக முடங்கும் அபாயம் உள்ளது.
ஐசிசி தொடர்களின் ஒளிபரப்பு உரிமத்தைப் பெற்றுள்ள நிறுவனங்கள் சுமார் 3 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளன. இதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதும் போட்டிகள் மூலமே அவர்களுக்குப் பெரும்பான்மையான வருவாய் கிடைக்கிறது. ஒரு இந்தியா - பாகிஸ்தான் போட்டியின் மதிப்பு மட்டும் சுமார் 250 மில்லியன் டாலருக்கும் அதிகம் என்று கூறப்படுகிறது.
இந்தப் போட்டி நடைபெறாவிட்டால், ஒளிபரப்பு நிறுவனங்களுக்குப் பெரும் நஷ்டம் ஏற்படும். அந்த நஷ்டத்தை ஈடுகட்ட, அவர்கள் ஐசிசிக்குக் கொடுக்கும் தொகையைக் குறைப்பார்கள். ஐசிசி அந்த நஷ்டத்தைப் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் கணக்கில் எழுதும். இதனால் பாகிஸ்தானுக்குக் கிடைக்க வேண்டிய பணம் வெகுவாகக் குறையும்.
லாகூர், கராச்சி மற்றும் ராவல்பிண்டி ஆகிய மைதானங்களைச் சீரமைக்கப் பாகிஸ்தான் வாரியம் சுமார் 18 பில்லியன் ரூபாய் செலவு செய்து வருகிறது. ஐசிசி தரும் நிதியை எதிர்பார்த்தே இந்தப் பணிகள் நடந்து வருகின்றன. இப்போது நிதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டால், மைதானப் பணிகள் பாதியிலேயே நிற்கும் நிலை உருவாகும்.
பாகிஸ்தான் சூப்பர் லீக் (பிஎஸ்எல்) மூலம் அந்த வாரியத்திற்கு ஓரளவுக்கு வருமானம் கிடைத்தாலும், அது முழுமையான நிர்வாகச் செலவுகளைச் சமாளிக்கப் போதுமானதாக இருக்காது. வீரர்களின் ஊதியம், உள்நாட்டுப் போட்டிகள் நடத்துதல், ஊழியர்களின் சம்பளம் எனப் பல செலவுகளுக்கு ஐசிசி நிதியே ஆதாரமாக உள்ளது.
ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுவிட்டு, இப்போது காரணம் இல்லாமல் பின்வாங்குவது சட்டரீதியாகவும் பாகிஸ்தானுக்குப் பின்னடைவை ஏற்படுத்தும். எனவே, 1300 கோடி ரூபாய் இழப்பைத் தவிர்க்கப் பாகிஸ்தான் தனது முடிவை மாற்றிக்கொள்ளுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.