நியூயார்க் : இந்திய அணிக்கு எதிரான தோல்விக்கு பாகிஸ்தான் அணி வீரர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் பொறுப்பேற்கிறோம் என்று பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன் தெரிவித்துள்ளார்.
இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது. இந்திய அணி நிர்ணயித்த 120 ரன்கள் இலக்கை கூட சேஸிங் செய்ய முடியாமல் பாகிஸ்தான் அணி தோல்வியை சந்தித்துள்ளது. இதனால் டி20 உலகக்கோப்பை தொடரில் லீக் சுற்றுடன் வெளியேறும் சூழலுக்கு பாகிஸ்தான் அணி தள்ளப்பட்டுள்ளது. இதனால் பாகிஸ்தான் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்த தோல்வி குறித்து பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன் பேசுகையில், முகமது ரிஸ்வான் 44 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். அந்த நேரத்தில் தேவையில்லாமல் அட்டாக் செய்ய முயன்று ஆட்டமிழந்துள்ளார். பும்ராவை அட்டாக் செய்ய முயன்றது நிச்சயம் தவறான முடிவு தான். ஏனென்றால் ஆட்டம் அந்த நேரத்தில் எந்த பக்கம் வேண்டுமானாலும் சாயும் நிலையில் இருந்தது.
பாகிஸ்தான் அணி பாலுக்கு பால் விளையாடினாலே வெற்றி என்ற நிலை தான் இருந்தது. அந்த நேரத்தில் தவறான முடிவை எடுத்து தோல்வியடைந்துள்ளோம். இதுபோன்ற தவறுகளை செய்யும் போது, அதன் விளைவுகளையும் நிச்சயம் சந்தித்தே ஆக வேண்டும். ரிஸ்வான் மட்டுமல்லாமல் அணியாகவே நாங்கள் சில தவறான முடிவுகளை முக்கியமான நேரத்தில் எடுத்ததாக நினைக்கிறேன்.

நியூயார்க் பிட்சில் பேட்டிங் செய்வது கடினம் என்பதை முன்னதாக அறிந்திருந்தோம். அதனால் ரிஸ்வானின் பேட்டிங்கை நிச்சயம் பாராட்ட வேண்டும். கடைசி வரை பாகிஸ்தான் அணி பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்பட்டனர். ஆனால் கடைசி 2 ஓவர்களில் ஆட்டம் மொத்தமாக மாறிவிட்டது. இந்த தோல்விக்கு நாங்கள் அனைவரும் தான் பொறுப்பு. நிச்சயம் தோல்வியை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்.
பாகிஸ்தான் அணி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. ஆனால் நிச்சயம் பிரச்சனைகளை சரி செய்து சிறந்த ஆட்டத்தை விளையாடுவோம். கடந்த 12 நாட்களாக பாகிஸ்தான் அணியுடன் பயணித்து வருகிறேன். இதுவொரு புதிய பயணமாக உள்ளது. வீரர்களை புரிந்து கொள்வதும் மகிழ்ச்சியாக உள்ளது. நிச்சயம் பாகிஸ்தான் அணிக்காக அனைவரும் வென்று கொடுப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.