கொழும்பு: டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி மீண்டும் தோல்வியை தழுவி இருக்கிறது. இதன் மூலம் டி20 உலக கோப்பை வரலாற்றில் இந்திய அணி எட்டு முறை பாகிஸ்தானை வீழ்த்தி இருக்கிறது. பாகிஸ்தான அணி ஒருமுறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
கொழும்புவில் நடைபெற்ற இந்த லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்த தொடரில் பாகிஸ்தான் அணி முழுவதுமாக கொழும்புவில் தான் விளையாடுகிறது என்பதால் அந்த அணிக்கு சாதகமான சூழல் நிலவியது.

இதனால் இந்த போட்டியில் இந்தியா என்ன செய்யப் போகிறது என்ற கலக்கமும் நமது ரசிகர்கள் மத்தியில் இருந்தது. ஆனால் வழக்கம் போல் பாகிஸ்தான் அணி இந்தியாவிடம் செம அடி வாங்கி இருக்கிறது. இந்திய அணியின் தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மா, மீண்டும் ஒருமுறை டக் அவுட் ஆகி ரசிகர்களை ஏமாற்றினார்.
எனினும் மற்றொரு தொடக்க வீரரான இசான் கிஷன் தன்னுடைய அதிரடியை மீண்டும் தொடர்ந்தார் பாகிஸ்தான் பந்து வீச்சுக்கு நலங்கு வைத்த அவர் 10 பவுண்டரி, மூன்று சிக்சர் என 40 பந்துகளில் 77 ரன்கள் குவித்தார். திலக் வர்மா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 24 பந்துகளில் 25 ரன்களும், சூரியகுமார் யாதவ் 29 பந்துகளில் 32 ரன்களும் எடுத்தனர்.
சுப்மன் கில் 17 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தார்.இறுதியில் ரிங்கு சிங் நான்கு பந்துகளில் 11 ரன்கள் எடுக்க இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்திருந்தது. பாகிஸ்தான் பந்துவீச்சில் சையும் அயூப் 25 ரகளை விட்டுக் கொடுத்து, மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.
இதனை அடுத்து 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க வீரர் ஃபர்கான் டக் அவுட் ஆகி வெளியேற சையும் அயூப் 6 ரன்களில் வெளியேறினார். இதேபோன்று கேப்டன் சல்மான் ஆகா 4 ரன்கள் மட்டுமே எடுக்க பாகிஸ்தான் அணி 13 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது அணியை காப்பாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்ட பாபர் அசாம் வெறும் ஐந்து ரன்களில் போல்ட் ஆனார்.
இதனால் பாகிஸ்தான அணி 34 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்தது. இந்த சூழலில் உஸ்மான் கான் மட்டும் தனி ஆளாக நின்று ஆறு பவுண்டரி, ஒரு சிக்சர் என 34 பந்துகளில் 44 ரன்கள் எடுத்தார். அவர் களத்தில் நின்றவரை பாகிஸ்தான் அணிக்கு கொஞ்சம் நம்பிக்கை இருந்தது. அவர் வெளியேறியவுடன் மற்ற வீரர்கள் யாரும் நிலைத்து நின்று விளையாடவில்லை.
இதனால் பாகிஸ்தான் அணியின் தோல்வி உறுதியாகிவிட்டது. இந்திய பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாத பாகிஸ்தான் அணி 114 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது. இதன் மூலம் 61 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. இந்திய தரப்பில் பும்ரா, ஹர்திக், வருண் சக்கரவர்த்தி, அக்சர் பட்டேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதில் வருண் நக்கரவர்த்தி ஹாட்ரிக் வாய்ப்பை வீணடித்தார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்று இருக்கிறது.