துபாய்: 2025 ஆசிய கோப்பை தொடரில், ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு இன்னும் சில மணி நேரங்களே உள்ள நிலையில், இந்திய அணிக்கு ஒரு அதிர்ச்சிகரமான செய்தி வெளியாகியுள்ளது. அணியின் நட்சத்திர தொடக்க ஆட்டக்காரரான சுப்மன் கில், வலைப்பயிற்சியின்போது காயம் அடைந்துள்ளதாக வெளியாகி உள்ள தகவல், இந்திய ரசிகர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
துபாயில் இன்று (செப்டம்பர் 14) இரவு 8 மணிக்கு நடைபெறவிருக்கும் இந்தப் போட்டிக்கான இறுதி கட்டப் பயிற்சியில் இந்திய அணி ஈடுபட்டிருந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

நேற்று மாலை நடந்த வலைப்பயிற்சியின்போது, சுப்மன் கில்லின் கையில் பந்து பலமாகத் தாக்கியுள்ளது. பந்து பட்டவுடன், அவர் வலியால் துடித்ததாகக் கூறப்படுகிறது. உடனடியாக, அணியின் பிசியோ விரைந்து வந்து அவருக்கு முதலுதவி அளித்தார். சிறிது நேரம் வலியால் அவதிப்பட்ட கில், பயிற்சியை பாதியிலேயே முடித்துவிட்டு வெளியேறினார். பின்னர், காயம்பட்ட கையில் ஐஸ் பேக்கை வைத்துக்கொண்டு, ஐஸ் பாக்ஸின் மீது அவர் அமர்ந்திருந்த காட்சி, கவலையை மேலும் அதிகரித்தது.
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் ஆகியோர் கில்லிடம் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினர். சக தொடக்க ஆட்டக்காரரான அபிஷேக் ஷர்மா, கில்லுக்கு தண்ணீர் பாட்டிலைத் திறந்து கொடுக்க உதவியதும், பிசியோ தொடர்ந்து அவரைக் கண்காணித்ததும், காயத்தின் தீவிரத்தைக் காட்டுவதாக அமைந்தது.
இருப்பினும், சில நிமிடங்களுக்குப் பிறகு, சுப்மன் கில் மீண்டும் வலைப்பயிற்சிக்குத் திரும்பி, அடுத்த பந்தை எதிர்கொள்ளத் தயாரானார். இது அணி நிர்வாகத்திற்கும், ரசிகர்களுக்கும் சற்று நிம்மதியை அளித்துள்ளது. ஆனாலும், பாகிஸ்தானுக்கு எதிரான முக்கியப் போட்டியில் அவர் விளையாடுவாரா என்ற சந்தேகம் இன்னும் நீடிக்கிறது.
ஒருவேளை, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுப்மன் கில்லுக்கு ஓய்வளிக்கப்பட்டால், அவருக்குப் பதிலாக விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சன் தொடக்க வீரராகக் களமிறங்க அதிக வாய்ப்புள்ளது. கடந்த ஆண்டு டி20 போட்டிகளில் தொடக்க வீரராகக் களமிறங்கி மூன்று சதங்களை விளாசிய அனுபவம் சஞ்சு சாம்சனுக்கு உள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிரான முதல் போட்டியிலும் சஞ்சு சாம்சன் அணியில் இடம்பிடித்திருந்தார், ஆனால் அவருக்கு பேட்டிங் செய்யும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஒருவேளை சுப்மன் கில் ஆடவில்லை என்றால் சஞ்சு சாம்சன் தொடக்க வீரராக விளையாட அதிக வாய்ப்பு உள்ளது.