கொழும்பு: டி20 உலகக் கோப்பைப் போட்டியில், இந்திய சுழற்பந்து வீச்சு படை, பாகிஸ்தானுக்குப் பெரும் அச்சுறுத்தலாக அமையும் என்று இங்கிலாந்து முன்னாள் வீரர் மோயின் அலி தெரிவித்துள்ளார். குல்தீப் யாதவ் இதில் முக்கியப் பங்கு வகிப்பார் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
குல்தீப் யாதவ் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோரின் மாறுபட்ட பந்துவீச்சு பாகிஸ்தானின் பேட்டிங் வரிசைக்குக் கடும் சவாலாக இருக்கும் என்று அலி கூறியுள்ளார். பிரேமதாசா ஆடுகளத்தின் தன்மை சுழற்பந்து வீச்சாளர்களுக்குச் சாதகமானதால், வாஷிங்டன் சுந்தரும் கூடுதல் பலம் சேர்க்கக்கூடும்.

இது குறித்து பேசிய மோயின் அலி, "இந்தியாவுக்காக குல்தீப் யாதவ் நிச்சயமாக விளையாட வேண்டும். பாகிஸ்தானுக்கு எதிராக எந்த இந்திய பந்துவீச்சாளரை விடவும் அவர் பெரிய அச்சுறுத்தலாக இருப்பார்," என்றார். குல்தீப்பை அணியில் சேர்க்க ஒரு பேட்ஸ்மேனை நீக்க வேண்டியிருக்கும். ரிங்கு சிங் அந்த வாய்ப்பை இழக்கலாம்.
குல்தீப் யாதவ் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாமிற்கு எதிராக சிறந்த சாதனை படைத்துள்ளார். எனவே, அவரது சேர்க்கை இந்தியாவுக்கு ஒரு நல்ல வாய்ப்பாகும். துபாயில் நடந்த ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில், பாகிஸ்தானுக்கு எதிராக அவர் 30 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டினார்.
பிரேமதாசா மைதானத்தின் ஆடுகளம் தோய்வான தன்மை கொண்டது. ஆனாலும், 2009 சாம்பியன்களான பாகிஸ்தானும் உஸ்மான் தாரிக், சாய்ம் அயூப், அப்ரார் அகமது, ஷதாப் கான், முகமது நவாஸ் என வலுவான சுழற்பந்து வீச்சாளர்களைப் பெற்றுள்ளது. தாரிக்கின் தனித்துவமான 'ஸ்லோ-ஆக்ஷன்' பந்துவீச்சு ஏற்கெனவே பேசுபொருளாகியுள்ளது. இதனால், இந்திய பேட்ஸ்மேன்களுக்கும் அவருக்கும் இடையிலான மோதல் முக்கியத் திருப்பமாக அமையும்.
கடைசியாக நடைபெற்ற 5 சர்வதேச டி20 போட்டியிலும் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவே வென்றுள்ளது. இதனால் இந்தியாவுக்கு எதிராக இந்தப் போட்டியை வென்று பதிலடி தர வேண்டும் என்ற உத்வேகத்தில் பாகிஸ்தான் வீரர்கள் உள்ளனர். அதே சமயம், இந்திய அணியில் அபிஷேக் சர்மா, நாளைய ஆட்டத்தில் விளையாடுவாரா என்ற தகவல் தெரியவில்லை.