துபாய்: ஆசியக் கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்திற்கான டிக்கெட் விற்பனை தொடங்கி இருக்கிறது. இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட்டின் தொடக்க விலையாக ரூ.11 ஆயிரம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த டிக்கெட்டை துபாய் மற்றும் அபுதாபி கிரிக்கெட் மைதான கவுண்டரில் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 6ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க உள்ளது. இந்த ஆசியக் கோப்பை தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், வங்கதேசம், இலங்கை, ஹாங் காங், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் ஆகிய 8 நாடுகள் பங்கேற்கின்றன. இந்த 8 அணிகளும் இரு குரூப்களாக பிரிக்கப்பட்டு, லீக் சுற்றுகள் நடத்தப்பட உள்ளன.

இந்தியா - பாகிஸ்தான் அணிகள் விளையாடும் போட்டி செப்டம்பர் 14ஆம் தேதி நடக்க உள்ளது. இந்த போட்டிகள் அனைத்து இரவு 8 மணிக்கு தொடங்க உள்ளது. டி20 ஆட்டமாக நடப்பதால், ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியா - பாகிஸ்தான் இடையிலான ஆட்டத்தை நேரில் பார்ப்பதற்காக ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.
இந்தப் போட்டிக்கான டிக்கெட்டுகளை வாங்குவதிலும் ரசிகர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் ஆசியக் கிரிக்கெட் கவுன்சில் டிக்கெட்டுகள் புக்கிங்கை தொடங்கி இருக்கிறது. டிக்கெட் புக்கிங்கை 3 பிரிவுகளாக பிரித்து விற்பனை செய்து வருகிறது. அதாவது முதல் பேக்கேஜாக குரூப் ஏ பிரிவில் ஆடும் இந்தியா, பாகிஸ்தான், ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் விளையாடும் போட்டிக்கு ரூ.11 ஆயிரம் ஆரம்ப விலையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
2வது பேக்கேஜாக சூப்பர் 4 போட்டிகளுக்கான டிக்கெட் அமைந்துள்ளது. சூப்பர் 4 போட்டிகளில் செப்டம்பர் 20ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த போட்டிகளைப் பார்க்க ஆரம்ப விலை கட்டணமாக ரூ.12,500 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் 3வது பேக்கேஜாக 2 சூப்பர் 4 போட்டிகள் மற்றும் ஆசியக் கோப்பை இறுதிப்போட்டிக்கான டிக்கெட் விலை ரூ.12,500 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த டிக்கெட்டுகளை துபாய் மற்றும் அபுதாபி மைதானத்தின் டிக்கெட் கவுண்டர்களிலும் வாங்கி கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 3 பேக்கேஜாக பிரித்துள்ளதன் மூலமாக அனைத்து அணிகள் விளையாடும் போட்டிகளுக்கும் ரசிகர்கள் குவிய வாய்ப்புகள் உள்ளது. பிரீமியமாக டிக்கெட் புக் செய்யும் ரசிகர்களுக்கு இப்படியான சலுகை அளிக்கப்பட்டிருப்பது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.