கொழும்பு: 2025 ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகக் கோப்பையில், ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, பாகிஸ்தான் அணியை கொழும்பில் எதிர்கொள்ள உள்ளது. இந்தப் போட்டி கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், போட்டியின் முடிவைத் தாண்டி ஒரு புதிய சர்ச்சை ஒன்று விவாதப் பொருளாக மாறியுள்ளது. அது, போட்டிக்கு முன்னும் பின்னும் இரு அணி வீராங்கனைகளும் கை குலுக்குவார்களா, மாட்டார்களா என்பதுதான்.
சமீபத்தில் நடந்து முடிந்த 2025 ஆசிய கோப்பை தொடரில், பாகிஸ்தானுடனான போட்டிகளின்போது இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி, கை குலுக்கும் வழக்கத்தைத் தவிர்த்தது. பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்திய அரசு மற்றும் கிரிக்கெட் வாரியத்தின் நிலைப்பாட்டைப் பிரதிபலிக்கும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டது.

தற்போது, இந்திய மகளிர் அணியும் அதே பாணியைப் பின்பற்றுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயலாளர் தேவ்ஜித் சைக்யா பேசும்போது, கிரிக்கெட்டின் அனைத்து விதிமுறைகளும் இந்தப் போட்டியின்போது முழுமையாகப் பின்பற்றப்படும் என்று உறுதி அளித்துள்ளார். ஆனால், கை குலுக்குதல் அல்லது வீராங்கனைகள் சகஜமாகப் பேசிக்கொள்வது போன்ற விஷயங்களுக்கு எந்த உத்தரவாதமும் அளிக்க முடியாது என்று கூறியுள்ளார்.
"அந்த விரோத நாட்டுடனான நமது உறவில் கடந்த ஒரு வாரத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. கொழும்பில் நடக்கும் போட்டியில், கிரிக்கெட்டின் அனைத்து நெறிமுறைகளும் பின்பற்றப்படும். ஆனால், கை குலுக்குவார்களா, கட்டிப்பிடிப்பார்களா என்பதையெல்லாம் இந்த நேரத்தில் என்னால் உறுதியாகச் சொல்ல முடியாது" என்று அவர் கூறியிருப்பது இந்த விவகாரத்தின் தீவிரத்தை அதிகரித்து இருக்கிறது.
இதற்கிடையே, பிடிஐ செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்த மற்றொரு பிசிசிஐ அதிகாரி, கை குலுக்குவதற்கான வாய்ப்பே இல்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். "பிசிசிஐ, மத்திய அரசின் நிலைப்பாட்டுடன் முழுமையாக உடன்படுகிறது. டாஸின் போது வழக்கமாக நடைபெறும் கை குலுக்கல், போட்டி நடுவருடன் புகைப்படம் எடுப்பது, போட்டியின் முடிவில் கை குலுக்கிக் கொள்வது என எதுவும் நடக்காது. ஆண்கள் அணி பின்பற்றிய அதே கொள்கைதான் மகளிர் அணிக்கும் பொருந்தும்," என்று அவர் கூறியுள்ளார்.
இந்தச் சூழலில், இந்திய அணி கை குலுக்கலைப் புறக்கணிக்கக் கூடும் என்பதை எதிர்பார்த்து, பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி தயாராகி வருவதாகத் தெரிகிறது. இதுகுறித்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்னவாக இருக்க வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் தங்கள் அணி மேலாளர் ஹினா முனாவர் ஆலோசனை கேட்டிருப்பதாகவும் பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) விதிமுறைகளின்படி, கை குலுக்குவது என்பது ஒரு பாரம்பரியமான வழக்கம் மட்டுமே தவிர, கட்டாயமான விதி அல்ல. இதுகுறித்து பிசிசிஐயோ, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமோ ஐசிசியிடம் இதுவரை எந்தப் புகாரும் தெரிவிக்கவில்லை. இந்தச் சர்ச்சைகள் ஒருபுறம் அனலைக் கிளப்பிக் கொண்டிருக்க, இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் மிகவும் நிதானமாகப் பதிலளித்துள்ளார்.
"கிரிக்கெட் வீரர்களாகிய நாங்கள், களத்தில் நடப்பதை மட்டுமே கட்டுப்படுத்த முடியும். எங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத விஷயங்களைப் பற்றி நாங்கள் சிந்திப்பதில்லை, அதைப் பற்றி ஓய்வறையில் விவாதிப்பதும் இல்லை. எங்கள் கவனம் முழுவதும் கிரிக்கெட்டின் மீது மட்டுமே உள்ளது," என்று கூறி, அனைத்து சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.