நியூயார்க் : பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றியை பெற்றுள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து இந்திய அணி களமிறங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் களமிறங்கிய இந்திய அணி 10 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 81 ரன்கள் சேர்த்திருந்தது. அதன்பின் கண்மூடி திறப்பதற்குள் 19 ஓவர்களில் 119 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. அதிகபட்சமாக இந்திய அணியின் ரிஷப் பண்ட் மட்டும் 31 பந்துகளில் 42 ரன்களை சேர்த்தார்.

பாகிஸ்தான் அணி தரப்பில் நசீம் ஷா 3 விக்கெட்டுகளையும், ஹாரிஸ் ராஃப் மற்றும் முகமது அமீர் இருவரும் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதன்பின் 120 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணி தரப்பில் பாபர் அசாம் - ரிஸ்வான் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 26 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், சூர்யகுமார் யாதவின் அபாரமான கேட்ச் காரணமாக பாபர் அசாம் 13 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதன்பின் முகமது ரிஸ்வானுடன் உஸ்மான் கான் கூட்டணி அமைத்தார். இவர்கள் இருவரும் நிதான ஆட்டத்தில் ஈடுபட்டனர். விக்கெட்டை பறிகொடுத்துவிட கூடாது என்ற கவனத்துடன் விளையாடியதால், பாகிஸ்தான் அணி 10 ஓவர்களில் 57 ரன்கள் சேர்த்திருந்தது. பார்ட்னர்ஷிப்பை பிரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, அக்சர் படேல் கையில் பந்தை கொடுத்தார். அவர் வீசிய முதல் பந்திலேயே உஸ்மான் கான் 13 ரன்கள் எடுத்து வெளியேற, தொடர்ந்து வந்த ஃபகர் ஜமான் 8 பந்துகளில் 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதனால் பாகிஸ்தான் அணி 13 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 73 ரன்கள் சேர்த்திருந்தது. தொடர்ந்து பும்ரா அட்டாக்கில் வந்து வீசிய முதல் பந்திலேயே ரிஸ்வான் ஸ்டம்புகள் சிதற போல்டாகி வெளியேறினார். இதனால் பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு கடைசி 30 பந்துகளில் 37 ரன்கள் தேவைப்பட்டது. பின்னர் அக்சர் படேல் வீசிய 16வது ஓவரில் 2 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட்ட, பாகிஸ்தான் அணி வீரர்களை பதற்றம் தொற்றிக் கொண்டது. இதனால் அடுத்த ஓவரை வீசிய ஹர்திக் பாண்டியாவை அட்டாக் செய்ய முயன்று ஷதாப் கான் 4 ரன்களில் வெளியேறினார்.
இந்த நிலையில் பாகிஸ்தான் வெற்றிக்கு கடைசி 3 ஓவர்களில் 30 ரன்கள் தேவைப்பட்டது. சிராஜ் வீசிய 18வது ஓவரில் 9 ரன்கள் சேர்க்கப்பட, பும்ரா வீசிய 19வது ஓவரில் 3 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து இஃப்திகார் விக்கெட்டையும் வீழ்த்தினார். இதனால் கடைசி ஓவரில் பாகிஸ்தான் வெற்றிக்கு 18 ரன்கள் தேவைப்பட்டது. இதனை வீசுவதற்கு அர்ஷ்தீப் சிங் அழைக்கப்பட்டார்.
முதல் பந்திலேயே இமாத் வாசிம் ஆட்டமிழக்க, 3 பந்துகளில் 16 ரன்கள் தேவைப்பட்டது. 4வது பந்தில் பவுண்டரி அடிக்கப்பட, கடைசி 2 பந்தில் 2 சிக்சர்கள் தேவைப்பட்டது. 5வது பந்தில் பவுண்டரி அடிக்கப்பட, கடைசி பந்தில் ஒரு ரன் மட்டுமே அடிக்கப்பட்டது. இதன் மூலம் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது.