துபாய்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் கழுத்தில் ஏற்பட்ட பிடிப்பு காரணமாக கடைசி நேரத்தில் ரிட்டையர்ட் ஹர்ட்டாகி வெளியேறியது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகளிருக்கான டி20 உலகக்கோப்பை தொடரின் 7வது லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணி விளையாடிய முதல் லீக் போட்டியில் நியூசிலாந்து அணியிடம் 58 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்தது. இதனால் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பெறும் முனைப்புடன் இந்திய அணி களமிறங்கியது. தொடர்ந்து டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் ஃபாத்திமா சனா பேட்டிங்கை தேர்வு செய்தார்.'

பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு தொடக்கமே சோகமாக அமைந்தது. நிடா டார் மற்றும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த மற்ற வீராங்கனைகள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் 15 ஓவர்களில் 71 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து பாகிஸ்தான் அணி தடுமாறியதால், 100 ரன்களையாவது கடக்குமா என்ற சந்தேகம் எழுந்தது.
இறுதியாக பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 105 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் அருந்ததி ரெட்டி 3 விக்கெட்டுகளையும், ஸ்ரேயாங்கா பாட்டீல் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். பின்னர் எளிய இலக்கை நோக்கி இந்திய அணியின் ஷஃபாலி வர்மா - ஸ்மிருதி மந்தனா கூட்டணி தொடக்கம் கொடுத்தது.
இருவருமே நிதானமாக விளையாடிய நிலையில், முதல் விக்கெட்டுக்கு 18 ரன்கள் எடுத்திருந்த போது, ஸ்மிருதி மந்தனா 16 பந்துகளில் 7 ரன்கள் எடுத்து வெளியேறினார். பின்னர் நம்பர் 3ல் ஜெமீமா ரோட்ரிக்ஸ் களமிறங்கி நிதானமாக ரன்களை சேர்த்தார். இவர்கள் இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், 10 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 50 ரன்களை சேர்த்திருந்தது.
பின்னர் சிக்ஸ் அடிக்க முயன்ற ஷஃபாலி வர்மா 35 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, பின்னர் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் களம் புகுந்தார். இதன்பின் விக்கெட் விடக் கூடாது என்று தீவிரமாக இருந்த நிலையில், ஜெமீமா ரோட்ரிக்ஸ் 23 ரன்களிலும், ரிச்சா கோஷ் டக் அவுட்டாகியும் வெளியேறினார். இதனால் 15.3 ஓவர்களில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 80 ரன்கள் சேர்த்திருந்தது. கடைசி 24 பந்துகளில் இந்திய அணியின் வெற்றிக்கு 22 ரன்கள் தேவையாக இருந்தது.
சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த ஹர்மன்ப்ரீத் கவுர் ஆட்டத்தை முடிப்பார் என்று பார்க்கப்பட்டது. ஆனால் வெற்றிக்கு 2 ரன்கள் தேவைப்பட்ட போது, கழுத்தில் பிடிப்பு ஏற்பட்டது. இதனால் 29 ரன்களில் ரிட்டையர்ட் ஹர்ட்டாகி வெளியேற, பின்னர் இளம் வீராங்கனை சஜனா வந்து பவுண்டரி அடித்து வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். இதனால் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, டி20 உலகக்கோப்பை தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.