துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. லீக் சுற்றில் ஏற்கனவே ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி தற்போது சூப்பர் 4 சுற்றிலும் பாகிஸ்தான் அணியை எளிதில் வீழ்த்திருக்கிறது.
முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி ஐந்து விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து களமிறங்கி இந்திய அணி நான்கு விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. பாகிஸ்தான அணி முதல் 10 ஓவரில் அதிரடியாக விளையாடி 91 ரன்கள் அடித்திருந்தார்கள். இதனால் இந்தியா கொஞ்சம் பதற்றம் அடைந்தது.

ஆனால் அதன் பிறகு சிறப்பாக செயல்பட்டனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணி கேப்டன் சூரியகுமார் யாதவும் எங்கள் அணி வீரர்கள் முக்கியமான கட்டத்தில் பொறுப்புடன் விளையாடுவதை நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கின்றது. இதன் காரணமாக என்னுடைய பணி எளிதாகி விட்டது.
முதல் 10 ஓவரில் பாகிஸ்தான் அணி அதிரடியாக விளையாடிய போது எங்கள் அணி வீரர்கள் பதற்றம் அடையவில்லை. அப்போது எடுத்துக்கொண்ட இடைவெளியில் நான் சொன்னது ஒன்றே ஒன்றுதான். இப்போதுதான் போட்டி தொடங்குகிறது என்றேன். பும்ராவுக்கு இன்று சரியான நாளாக அமையவில்லை. ஆனால் கிரிக்கெட்டில் இது ஒரு பகுதி தான். பும்ரா ஒன்றும் ரோபோ கிடையாது.
அவரும் சாதாரண மனிதர் தான். அவர் நிச்சயம் மீண்டும் கம்பேக் கொடுப்பார். ஆனால் இன்று சிவம் துபே எங்களுக்கு நான்கு ஓவர்கள் வீசி பாகிஸ்தானின் ரன் வேகத்தை தடுத்து நிறுத்தினார். எங்கள் அணியின் தொடக்க வீரர்கள் கில்லும், அபிஷேக் ஷர்மாவும் நெருப்பும் ஐஸ் போன்றவர்கள் ஆவார்கள்.
இருவரும் ஒருவருக்கு ஒருவரை புரிந்து கொண்டு அபாரமாக விளையாடுகிறார்கள். இருவரும் சேர்ந்து விளையாடுவதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கின்றது. இந்த இலக்கை துரத்தும் போது ஏதேனும் ஒரு வீரர் பத்து முதல் 12 ஓவர் வரை நிற்க வேண்டும் என்று நாங்கள் நினைத்தோம். அதை அவர்கள் செய்து காட்டி விட்டார்கள். நாங்கள் கேட்சை கோட்டை விட்டதற்கு பயிற்சியாளர் திலீப் எங்கள் அனைவருக்கும் ஈமெயில் அனுப்பி இருக்கின்றார். அடுத்த போட்டியில் நாங்கள் சிறப்பாக பில்டிங் செய்வோம் என்று நம்புகிறோம் என சூரியகுமார் தெரிவித்துள்ளார்.