துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை ஒன்பதாவது முறையாக கைப்பற்றி சாதனை படைத்தது. இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தியிருக்கிறது. இந்த நிலையில், பாகிஸ்தான் அமைச்சரும் ஆசிய கிரிக்கெட் சங்கத்தின் தலைவருமான மோசின் நக்விடம் கோப்பையை வாங்க மாட்டோம் என இந்திய வீரர்கள் போர் கொடி துக்கினர்.
இதேபோன்று கோப்பையை அளிக்கும் உரிமையை நானும் விட்டுக் கொடுக்க மாட்டேன் என மோசின் நக்வி கூறியதால், ஆசிய கோப்பையை இந்திய அணி வாங்கவில்லை. இது மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து தற்போது கருத்து தெரிவித்துள்ள முன்னாள் இந்திய வீரர் சையது கிர்மானி, இந்திய வீரர்கள் செயல் தவறானது என சாடி இருக்கிறார்.

இது குறித்து பேசிய அவர், இந்த தொடரில் நாம் விளையாடிய விதம் உண்மையிலேயே தவறானது. கொஞ்சம் கூட மதிப்பே இல்லாமல் இருந்தது. நாம் மிகவும் களத்தில் கோபமாகவும், அகங்காரமாகவும் நடந்து கொண்டோம். இந்திய அணியின் செயல்பாடு குறித்து பலரும் எனக்கு மெசேஜ்களை அனுப்பி வருகின்றனர்.
இந்திய அணி ஏன் இவ்வாறு செய்தது அரசியலை ஏன் கிரிக்கெட் களத்திற்குள் கொண்டு வருகிறீர்கள்? சில கமெண்ட்களை எல்லாம் பார்க்கும் போது எனக்கு வெட்கமாக இருக்கின்றது. நமது தலைமுறை கிரிக்கெட் வீரர்களுக்கு என்னதான் ஆனது? ஆசிய கோப்பை தொடரில் நடைபெற்ற அனைத்து சம்பவங்களும் வெட்கக்கேடானது.
இது போன்ற மெசேஜ்கள் எனக்கு அதிகமாக வந்தது. களத்தில் என்ன நடந்ததோ, அதை களத்தில் விட்டு விட்டு வாருங்கள். அதை வெளியேவும் கொண்டு வராதீர்கள். உங்களுடைய வெற்றியை வேறு எதிலும் தொடர்பு படுத்தாதீர்கள். கிரிக்கெட் போன்ற சிறந்த விளையாட்டு மூலம்தான் நீங்கள் அனைவரும் சம்பாதித்து வருகிறீர்கள்.
ஆனால் அதனை அரசியலுக்காக பயன்படுத்தாதீர்கள். நாங்கள் கிரிக்கெட் விளையாடும் போது பாகிஸ்தான் வீரர்களுடன் எங்களுக்கு நல்ல நட்புறவு இருந்தது. அவர்கள் இந்தியாவிற்கு வருவார்கள். நாங்கள் பாகிஸ்தானுக்கு செல்வோம். எங்களுக்குள் நல்ல ஒரு நட்புணர்வு இருந்தது. ஆனால் இப்போது நடைபெறும் விஷயம் எல்லாம் ஏற்கவே முடியாது என்று சையது கிர்மானி கூறியுள்ளார்.