நியூயார்க் : இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியை தொடக்க வீரராக களமிறக்கி தவறு செய்வதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் கம்ரான் அக்மல் தெரிவித்துள்ளார்.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான நாளை இரவு நடக்கவுள்ளது. நியூயார்க் மைதானத்தில் நடக்கும் இந்த போட்டிக்கு ரசிகர்களிடையே தீவிர எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே பாகிஸ்தான் அணி அமெரிக்கா அணியுடன் தோல்வியை சந்தித்துள்ளதால், இந்திய அணியை வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இந்திய அணியை பொறுத்தவரை அயர்லாந்து அணியை எளிதாக வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் சிறந்த ரன் ரேட்டுடன் உள்ளது. பிட்ச்கள் குறித்த புகார்கள் இருந்தாலும், இந்திய அணி வீரர்களின் திறமையால் எளிதாக சமாளிக்க முடியும் என்று பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்திய அணி குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் கம்ரான் அக்மல் பேசுகையில், இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் சரியா என்ற கேள்வி உள்ளது.
ஏனென்றால் விராட் கோலி நம்பர் 3 வரிசையில் பேட்டிங் ஆடும் போது அழுத்தத்தை அவர் எடுத்து கொண்டு போட்டியை முடித்து கொடுப்பார். அது இந்திய அணிக்கு மிகவும் முக்கியம் என்று நினைக்கிறேன். இந்திய அணி நிர்வாகம் ஜெய்ஸ்வாலை கொண்டு தொடக்கம் கொடுக்க வேண்டும். அதன்பின் விராட் கோலி நம்பர் 3ல் களமிறங்க வேண்டும். ஒருவேளை இந்திய அணி விராட் கோலியை தொடக்க வீரராக களமிறக்கினால், நிச்சயம் சிக்கலில் சிக்கிவிடும்.
அதனால் இந்திய அணி விராட் கோலி தொடக்க வீரராக களமிறக்கி தவறு செய்வதாக கருதுகிறேன். அதேபோல் இந்திய அணியின் பவுலிங் சிறந்த அனுபவத்துடன் உள்ளது. பும்ரா, சிராஜ், ஹர்திக் பாண்டியா உள்ளிட்டோர் எளிதாக விக்கெட்டை கைப்பற்ற கூடியவர்களாக இருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் ஒரே மைதானத்தில் 3 போட்டிகளில் விளையாடுவதால் இந்திய அணிக்கு கூடுதல் சாதகம் இருக்கிறது. அதனால் அவர்கள் நம்பிக்கையுடன் இருப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் தொடக்க வீரராக களமிறங்கிய விராட் கோலி 15 போட்டிகளில் விளையாடி 741 ரன்களை விளாசி தள்ளினார். இதன் காரணமாகவே ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் இருவரும் விராட் கோலியை கொண்டு தொடக்கம் கொடுக்கலாம் என்று முடிவு செய்துள்ளனர். அதேபோல் அமெரிக்கா மைதானத்தில் இந்திய அணியின் வியூகம் இதுவாகவே இருக்கும் என்று பார்க்கப்படுகிறது.